போக்ஸோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எடியூரப்பா மீது, கைது வாரண்ட் பிறப்பித்தது பெங்களூரு நீதிமன்றம்.
கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி டாலர்ஸ் காலனியில் உள்ள எடியூரப்பாவின் இல்லத்தில் சந்திப்பின் போது, தனது மகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக, 17 வயது சிறுமியின் தாயார் சதாசிவநகர் காவல் நிலையத்தில், மார்ச் 14ஆம் தேதி புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில், பெங்களூரு காவல்துறையினர் கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்தத் தலைவருமான எடியூரப்பா மீது போக்ஸோ சட்டம் மற்றும் ஐபிசி பிரிவு 354 ஏ ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதே நாளில் விசாரணை குற்றவியல் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையில், குற்றம் சாட்டிய சிறுமியின் தாயார், நுரையீரல் புற்றுநோயால் கடந்த மாதம் இறந்தார். இதன் பின்னர், பாதிக்கப்பட்டவரின் சகோதரர் இந்த வாரத் தொடக்கத்தில் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தெரிவித்ததாவது, இந்த வழக்கு மார்ச் 14ஆம் தேதி பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இதுவரையில் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று குற்றம் சாட்டினார். எடியூரப்பா கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்று சிறுமியின் சகோதரர் கோரினார்.
இந்நிலையில், எடியூரப்பா இந்த குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், தனக்கு எதிரான எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நேற்று (ஜூன் 12) மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஜூன் 14ஆம் தேதி விசாரிக்கப்பட உள்ளது. ஆனால், விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால் எடியூரப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் கோரி, குற்றவியல் புலனாய்வுத் துறையின் சிறப்புக் குழு, விரைவு நீதிமன்றத்தை நாடியது. இதனால், பெங்களூருவில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம், ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்ததைத் தொடர்ந்து எடியூரப்பா கைது செய்யப்படுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.