ஒடிசாவில் புதிதாக ஆட்சியமைத்துள்ள முதல்வர் மோகன் சரண் மாஜீ தலைமையிலான பாஜக அரசு, இன்று புரி ஜெகந்நாதர் கோவிலின் அனைத்து கதவுகளையும் 4 ஆண்டுகளுக்குப் பின் திறந்துள்ளது.
நேற்று மாலை ஒடிசா முதல்வராக பதவியேற்ற மோகன் சரண் மாஜீ, முதல் உத்தரவாக புரி ஜெகந்நாதர் கோவிலின் நான்கு கதவுகளையும் திறக்க உத்தரவிட்டார். இதன் மூலம் தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை முதல்வர், அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் ஒடிசா மக்களவை உறுப்பினர் சம்பித் பத்ரா ஆகியோர் முன்னிலையில் கோவிலின் அனைத்துக் கதவுகளும் திறக்கப்பட்டன.
புரி ஜெகந்நாதர் கோவிலின் கதவுகள் சிம்ஹதுவாரா (சிங்கக் கதவு), அஹ்வதுவாரா (குதிரைக் கதவு), வியாக்ரதுவரா (புலிக் கதவு), ஹஸ்திதுவாரா (யானைக் கதவு) என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முதல்வர் மோகன் சரண் மாஜீ பேசுகையில், “ஜெகந்நாதர் கோவிலின் கதவுகளைத் திறக்க நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவு ஏற்கப்பட்டு இன்று காலை 6.30 மணியளவில் கதவுகள் திறக்கப்பட்டு, எங்களது எம்.எல்.ஏ-க்கள் மற்றும், எம்.பி-க்கள் கோவிலில் நடத்தப்பட்ட மங்கள ஆரத்தியில் கலந்து கொண்டனர்.
ஜெகந்நாதர் கோவிலின் வளர்ச்சிக்கும் மற்ற வேலைகளுக்கும் நிதியினை ஒதுக்க எங்களது அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மேலும், மாநில பட்ஜெட் தாக்கலின் போது, கார்ப்பஸ் நிதியாக கோவிலுக்கு ரூ.500 கோடி ஒதுக்கவும் முடிவு செய்துள்ளோம்” என்று கூறினார்.
கடந்த 2020-ல், கரோனா தொற்றின் காரணமாக முதல்முறையாக ஜெகந்நாதர் கோவிலின் கதவுகள் பக்தர்களுக்கு மூடப்பட்டன.
பின்னர், 2020 டிசம்பரில் பொதுமக்கள் தரிசனம் செய்ய ஒரு கதவு மட்டும் திறக்கப்பட்டது. நான்கு ஆண்டுகள் கழித்தும் மற்ற கதவுகள் திறக்கப்படாமல் இருந்தன. மேலும், கோவிலை பராமரிப்பு மற்றும் அழகுப்படுத்தும் வேலைகள் நடந்து வந்ததாலும் கதவுகள் மூடி வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.