தண்ணீர் பிரச்னை: தில்லி அமைச்சர் அதிஷி காலவரையற்ற உண்ணாவிரதம்
தலைநகர் தில்லிக்கு கூடுதல் தண்ணீர் வழங்கக் கூறி தில்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளார்.
முன்னதாக தேசிய தலைநகரில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தில்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி புதன்கிழமை கடிதம் எழுதியிருந்தார். அதில், தில்லியில் தலைதூக்கிவரும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க வேண்டும்.
மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் நாளுக்குநாள் அவதியடைந்து வருகின்றனர். இதை உடனே தலையிட்டுத் தீர்க்க வேண்டும்.
இரண்டு நாள்களுக்குள் தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படாவிட்டால் ஜூன் 21 முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி தலைநகர் தில்லிக்கு கூடுதல் தண்ணீர் வழங்கக் கூறி தில்லியின் ஜானக்புரா பகுதியில் நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளார்.
அப்போது கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவால், ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ஹரியாணா தண்ணீர் வழங்கும் வரை தனது போராட்டம் தொடரும் எனவும் அதிஷி தெரிவித்துள்ளார்.