தண்ணீர் பிரச்னையைத் தீர்க்கக் கோரி பிரதமருக்கு ஆம் ஆத்மி அமைச்சர்கள் கடிதம்!
தில்லியின் பங்குத் தண்ணீரை ஹரியாணா தொடர்ந்து அனுப்ப மறுத்து வருகின்ற நிலையில்.. அமைச்சர்கள் கடிதம்
தலைநகர் தில்லியில் நிலவும் தண்ணீர் பிரச்னையை முன்னுரிமை அடிப்படையில் தீர்க்க வலியுறுத்தியுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் கடிதம் எழுதியுள்ளார்.
தில்லிக்கு கிடைக்கவேண்டிய பங்குத் தண்ணீரை ஹரியாணா தரமறுத்துள்ள நிலையில் தலைநகரில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
செய்தியார்களுடன் பேசிய தில்லி அமைச்சர்கள் கோபால் ராய், சௌரப் பரத்வாஜ், கைலாஷ் கஹ்லோட் மற்றும் இம்ரான் ஹுசைன் ஆகியோர் அதிஷியின் காலவரையற்ற உண்ணாவிரதம் நான்கு நாளாகியுள்ளதாகவும், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும் தெரிவித்தனர்.
ஜங்புராவின் போகலில் அதிஷியின் உண்ணாவிரதப் போராட்டம் நடந்த இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தண்ணீர் பிரச்னை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுத அமைச்சர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, அமைச்சர்கள் அந்தக் கடிதத்தில் கூறியதாவது, கடும் வெப்பம் நிலவிய போதிலும், ஹரியாணாவில் இருந்து தில்லிக்கு உரிய தண்ணீரை வழங்கப்படவில்லை.
தில்லியில் மொத்த நீர் விநியோகம் 1,005 கனஅடியாகவும், இதில் 613 கனஅடி நீர் மட்டுமே ஹரியாணாவில் இருந்து அனுப்பப்படுகிறது. கடந்த பல வாரங்களாக ஹரியாணாவில் இருந்து வரும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.