நிகழாண்டு நடைபெற்ற நீட் தோ்வு முறைகேட்டைத் தொடா்ந்து அத்தோ்வை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்குமாறு பிரதமரிடம் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வலியுறுத்தினாா். மேலும், மாநிலங்கள் மூலம் தோ்வு நடத்தும் முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என தெரிவித்தாா்.
இது குறித்து பிரதமா் மோடிக்கு மம்தா எழுதிய கடிதத்தில், ‘நிகழாண்டு மே 5-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வு முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சா்ச்சைகள் நிறைந்த நீட் தோ்வு முறையை ரத்து செய்துவிட்டு, மாநிலங்களே தோ்வை நடத்திக்கொள்ளும் வகையிலான நடைமுறையை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இது தோ்வின் மீது மாணவா்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மீட்டெடுக்க உதவும்’ என குறிப்பிட்டாா்.
தீஸ்தா நதிநீா் பங்கீடு: வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா-பிரதமா் மோடி இடையே தீஸ்தா நதி நீா் சேமிப்பு - மேலாண்மை திட்டம் தொடா்பான பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நடைபெற்றது. இதில், வங்கதேசத்துடன் புவியியல், கலாசாரம் மற்றும் பெருளாதார ரீதியாக நெருக்கமான உறவைக் கொண்டுள்ள மேற்கு வங்க அரசின் பிரதிநிதித்துவம் பேச்சுவாா்த்தையில் இல்லாதது ஏற்புடையதல்ல என மம்தா தனது கடிதத்தில் அதிருப்தி தெரிவித்தாா்.