தேர்தல் பத்திர தகவல் தர கால அவகாசமா? ஸ்டேட் வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!
தேர்தல் நிதிப் பத்திரங்கள் விவகாரம்: எஸ்பிஐ மீதான அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு ஏடிஆர் கோரிக்கை
தேர்தல் நிதி பத்திரங்கள் குறித்த தகவல் தர பாரத ஸ்டேட் வங்கிக்கான நீதிமன்ற காலக்கெடு முடிவடைந்த நிலையில் வழக்கு தொடர்ந்த ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு (ஏடிஆர்), எஸ்பிஐ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வியாழக்கிழமை கோரியுள்ளது.
தேர்தல் நிதிப் பத்திரங்கள் சட்டவிரோதமானது எனக்கூறி தடை விதிக்கக் கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்களை தடை செய்வதாக கடந்த பிப்.15ஆம் தேதி உத்தரவிட்டது.
மேலும் தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பான விவரங்களையும் வெளியிட மார்ச் 6ஆம் தேதி வரை அவகாசம் அளித்து ஸ்டேட் வங்கிக்கு உத்தரவு பிறப்பித்தது. அதற்குள் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது.
Advertisement
Advertisement
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை மார்ச் 13ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கு மத்தியில் தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்கான காலக்கெடுவை ஜுன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (மார்ச் 4) கோரிக்கை விடுத்தது.
காலக்கெடு முடிவடைந்த நிலையில் எஸ்பிஐ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை மேற்கொள்ளுமாறு ஏடிஆர் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.
எஸ்பிஐ முன்வைத்துள்ள கோரிக்கையுடன் சேர்த்து இதனையும் விசாரணைக்கு எடுத்து கொள்ளுமாறு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கேட்டுள்ளார்.
வழக்கு விவரங்களை மின்னஞ்சலில் அனுப்புமாறும் இது தொடர்பாக ஆணை பிறப்பிப்பதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்ததாக பூஷண் குறிப்பிட்டுள்ளார்.