10 ஆண்டுகள் ஆட்சி வெறும் டிரைலர்தான்: பிரதமர் மோடி
10 ஆண்டுகள் ஆட்சி வெறும் டிரைலர்தான் என்றார் பிரதமர் மோடி
அகமதாபாத்: நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் டிரைலர்தான் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் பேசிய பிரதமர் மோடி, 2014ஆம் ஆண்டைக் காட்டிலும் நாட்டின் பட்ஜெட் 6 மடங்கு அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டிப் பேசியவர், ரயில்வே கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உயரும் என்பதற்கும் உறுதியளித்துள்ளார்.
ஏராளமான ரயில்வே திட்டங்களை தொடங்கி வைதும், சில ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பேசிய பிரதமர் மோடி, ரயில்வேயை மோசமான நிலையில் இருந்து மீட்டெடுத்ததன் மூலம் தனது தலைமையிலான மத்திய அரசு மன உறுதியை வெளிப்படுத்தியுள்ளது என்று கூறினார்.
மத்திய அரசின் முக்கிய பணிகளில் ரயில்வே மேம்பாடும் ஒன்றாக இணைந்துவிட்டது. கடந்த 10 ஆண்டுகள் நடந்தது வெறும் டிரைலர்தான். இன்னும் நீண்ட தொலைவு செல்லவேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எங்களைப் பொறுத்தவரை, வளர்ச்சித் திட்டங்கள் மத்தியில் ஆட்சியமைப்பதற்காக அல்ல, மாறாக பரந்த பாரதத்தை அமைப்பதற்காக. நாம் எதிர்கொண்ட போராட்டங்களை நமது எதிர்கால சந்ததியினர் சந்திக்கக் கூடாது. எங்கள் 10 ஆண்டுகளில், கிழக்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் சிறப்பான சரக்கு வழித்தடங்களையும் உருவாக்கியுள்ளோம். இந்த கோரிக்கை காங்கிரஸ் அரசால் பல தசாப்தங்களாக தாமதப்படுத்தப்பட்டவை. தொழில்துறை மண்டலங்களை உருவாக்க சரக்கு வழித்தடங்கள் ஒரு முக்கிய சக்தியாக செயல்படுகின்றன” என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.
வந்தே பாரத் ரயில்கள் நாட்டில் தற்போது 250 மாவட்டங்களில் இயக்கப்படுகின்றன. வந்தே பாரத் ரயில்களின் வழித்தடத்தை மத்திய அரசு தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.
ரயில்வேயின் 100% மின்மயமாக்கலை நோக்கி நாங்கள் பணியாற்றி வருகிறோம். சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் ரயில் நிலையங்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளோம். இந்த சீர்திருத்தங்கள் ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ என்ற சூழலை உருவாக்கும்” என்று பிரதமர் கூறினார்.