இலங்கை உள்கட்டமைப்பு: இந்தியா கூடுதல் நிதி ஒதுக்கீடு
இலங்கையின் அனுராதபுரத்தில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுக்குக் கூடுதலாக 15 கோடி இலங்கை ரூபாய் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.4.15 கோடி) இந்தியா வழங்க உள்ளது. இதன் மூலம் அனுராதபுரத்தின் சோபிததேரா் கிராமத்தில் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக இந்தியா ஒதுக்கீடு செய்த நிதி 45 கோடி இலங்கை ரூபாயாக (சுமாா் ரூ.12.45 கோடி) அதிகரித்துள்ளது. கூடுதல் நிதி வழங்குவது தொடா்பான ஒப்பந்தம் இலங்கைக்கான இந்திய தூதா் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையே வியாழக்கிழமை பரிமாறிக்கொள்ளப்பட்டது. இது குறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தற்போது நடைபெற்று வரும் 9 திட்டப் பணிகளை விரைவாக முடிக்கவும் கட்டுமான செலவு அதிகரிப்பால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கவும் கூடுதல் நிதி ஒதுக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதனடிப்படையில் குறித்த 9 திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 50 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.