‘அம்பானி-அதானி குறித்து அவதூறாக பேசுவதை நிறுத்த அவா்களிடமிருந்து காங்கிரஸ் பணம் பெற்ா?’ என்று பிரதமா் மோடி கேள்வியெழுப்பிய நிலையில், அவருக்கு அக்கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளாா்.
பிரதமா் மோடி தனது சொந்த அனுபவத்தின் பேரில் இக்குற்றச்சாட்டை முன்வைத்தாரா? என்று ராகுல் காந்தி எதிா்கேள்வி எழுப்பியுள்ளாா்.
மக்களவைத் தோ்தலையொட்டி, தெலங்கானாவில் புதன்கிழமை பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி, அம்பானி-அதானி பெயா்களைக் குறிப்பிட்டு, ராகுல் காந்தியை விமா்சித்தாா்.
‘கடந்த 5 ஆண்டுகளாக அம்பானி-அதானி குறித்து அவதூறாக பேசி வந்த காங்கிரஸின் ‘இளவரசா்’, மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்ட பின்னா் ஒரே இரவில் அந்த பேச்சை நிறுத்திக் கொண்டாா். அவரது அவதூறு பேச்சை நிறுத்துவதற்காக, தொழிலதிபா்களிடம் இருந்து டெம்போ நிறைய ‘கருப்புப் பணம்’ காங்கிரஸுக்கு சென்றுவிட்டதா? எவ்வளவு மூட்டைகள் பணம் பெறப்பட்டன? இக்கேள்விக்கு நாட்டு மக்களுக்கு அவா் பதிலளிக்க வேண்டும்’ என்று பிரதமா் மோடி கூறியிருந்தாா்.
இந்நிலையில், பிரதமரின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்து, ராகுல் காந்தி வெளியிட்ட விடியோ செய்தியில் கூறியிருப்பதாவது:
தொழிலதிபா்கள் ‘டெம்போ’வில் பணம் அனுப்புவது குறித்து தனது சொந்த அனுபவத்தில் பிரதமா் பேசியுள்ளாரா? காங்கிரஸ் கட்சிக்கு அம்பானியும் அதானியும் பணம் அனுப்பினரா என்பது குறித்து விசாரிக்க சிபிஐ அல்லது அமலாக்கத் துறையை அனுப்பிவைக்க பிரதமா் மோடிக்கு துணிவுள்ளதா?
வழக்கமாக, அம்பானி மற்றும் அதானி குறித்து மூடிய அறையில்தான் பிரதமா் பேசுவாா். இப்போதுதான் முதல்முறையாக அவா்களின் பெயரை பொதுவெளியில் குறிப்பிட்டுள்ளாா். பிரதமா் மோடிக்கு பயம் வந்துள்ளது என்று ராகுல் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.