முகப்பு
இந்தியா

தபோல்கர் கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள் தண்டனை! மூவர் விடுதலை!

தபோல்கர் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை! மூவர் விடுதலை!

Updated On : 10 மே, 2024 at 7:27 AM
சமூக செயற்பாட்டாளர் நரேந்திர தபோல்கர்
பகிர்:

மகாராஷ்டிரத்தில் சமூக ஆர்வலர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் இரண்டு பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது உபா சிறப்பு நீதிமன்றம்.

குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட சச்சின் ஆண்ட்ரே, சரத் கலாஸ்கர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தலா ரூ.5 லட்சம் அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த டாக்டர் வீரேந்திர சிங் தாவ்டே, சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த விக்ரம் பாவே, இந்த வழக்கில் ஆரம்பத்தில் குற்றம்சாட்டப்பட்ட சிலருக்கு ஆதரவாக வாதாடி வந்த வழக்குரைஞர் சஞ்சீவ் புனலேகர் ஆகியோரை விடுதலை செய்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் வசித்து வந்த மருத்துவர் நரேந்திர தபோல்கர். இவர், கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி அதிகாலை நடைப்பயிற்சி சென்றபோது, ஓங்காரேஸ்வரர் பாலம் அருகில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், 20 சாட்சியங்களிடம் சாட்சியங்கள் பெறப்பட்டிருந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள், மூடநம்பிக்கைக்கு எதிரான தபோல்கரின் அறப்போராட்டத்தை எதிர்த்ததாக அரசுத் தரப்பு தனது இறுதி வாதங்களில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பக்கட்டத்தில் இந்த வழக்கை புனே காவல்துறை விசாரணை நடத்தியது. பிறகு இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அப்போதுதான், மருத்துவரான வீரேந்திரசிங் தாவடே உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்தான் இந்தக் கொலைச் சம்பவத்தில் மூளையாக இருந்து செயல்பட்டதாக சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த கொலை வழக்கில், முதலில், குற்றவாளிகள் என்று சரங் அகோல்கர் மற்றும் வினய் பவாரை சிபிஐ கைது செய்திருந்தது. பிறகு, சச்சின் ஆண்ட்ரே, சரத் கலாஸ்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பிறகு கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக சஞ்சீவ் புனலேகர், விக்ரம் பாவே ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தற்போது தாவடே, சச்சின் ஆண்ட்ரே, கலாஸ்கர் ஆகியோர் சிறையில் உள்ளனர். புனலேகர், பாவே ஆகியோர் பிணையில் வெளியே உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.