சாதாரண மனிதர்களைப் போல பயலாஜிகலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
மோடியின் இந்தக் கருத்து தற்போது ஊடகங்களில் வைரலாகி மாறுபட்ட விமர்சனங்களைத் ஏற்படுத்தி வருகிறது.
ஒடிஸாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, பிரதமர் நரேந்திர மோடி தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் மோடி கூறியதாவது:
“நான் பயலாஜிகலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை என நம்புகிறேன். மனிதப் பிறவியாக இருக்க வாய்ப்பில்லை. என்னை பூமிக்கு அனுப்பியது பரமாத்மாதான்.
"ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காகக் கடவுள் என்னை பூமிக்கு அனுப்பியுள்ளார். நான் பெற்றிருக்கும் ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றிருப்பது கிடையாது. கடவுளால் மட்டுமே இதை கொடுக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கள்கிழமை புரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சம்பித் பத்ராவை ஆதரித்து பிரதமர் மோடி வாகனப் பேரணியில் ஈடுபட்டார். தொடர்ந்து, செய்தியாளர்களுடன் பேசிய சம்பித் பத்ரா, “புரி ஜெகந்நாதர் பிரதமர் மோடியின் பக்தர்” என்று தெரிவித்திருந்தார்.
ஜெகந்நாதரை அவமதிக்கும் விதமாக இந்த கருத்து உள்ளதாக ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்ட சம்பித், மோடி ஜெகந்நாதரின் பக்தர் எனக் கூறுவதற்கு பதிலாக வாய் தவறி கூறிவிட்டதாக மன்னிப்பு கோரியதுடன், 3 நாள்கள் விரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்தார்.
இந்த நிலையில்தான், பிரதமர் மோடி, தான் மனிதப் பிறவி அல்ல என்று குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.