பிகாரில் பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு ‘பெட் பெர்ஃபாமன்ஸ்’ காரணமாக சம்பளம் பிடித்தம் செய்யவுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
‘பேட் பெர்ஃபாமன்ஸ்’(மோசமான செயல்திறன்) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவதற்கு பதிலாக தவறுதலாக ‘பெட் பெர்ஃபாமன்ஸ்’ என்று அச்சிட்டுவிட்டதாக மாவட்ட கல்வித் துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
பிகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பள்ளிகளில் கல்வித் துறை அதிகாரிகள் கடந்த மே 22-ஆம் தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல ஆசிரியர்கள் பணிக்கு வராதது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், பல ஆசிரியர்களின் செயல்பாடுகள் திருப்தி அளிக்காதது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வித் துறை அதிகாரி மூலம் நடவடிக்கை மேற்கொண்டு அதிகாரப்பூர்வமாக கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. ஆனால், அந்த கடித்தத்தில் இடம்பெற்றிருந்த வார்த்தைகள் கல்வித் துறை அதிகாரிகளின் தரத்தை அம்பலப்படுத்தும் விதமாக மாறிவிட்டது.
அந்த கடிதத்தில் ‘பெட் பெர்ஃபாமன்ஸ்’ (Bed Performance) காரணமாக 13 ஆசிரியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், பள்ளியில் பெயர் இருக்க வேண்டிய இடங்களில் ஆசிரியர்களின் பெயர்களும், ஆசிரியர்கள் பெயர் இருக்க வேண்டிய இடங்களில் பள்ளிகளின் பெயரும் தவறுதலாக அச்சடிக்கப்பட்டிருந்தது.
இந்த கடிதம் இணையத்தில் வைரலான நிலையில், ‘பேட் பெர்ஃபாமன்ஸ்’ (Bad Performance) என்பதற்கு பதிலாக தவறுதலாக அச்சிடப்பட்டுவிட்டதாக மாவட்ட கல்வி அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.
எனினும், இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த பிகார் கல்வித் துறையின் தரத்தை அம்பலப்படுத்தியுள்ளதாக இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.