ஜார்க்கண்டிலும் புல்டோசர் அரசியல்! தேர்தல் பிரசாரம் நிறைவு!
ஜார்க்கண்ட்: புல்டோசர் அரசியலைப் பேசிய யோகி ஆதித்யநாத்...
ஜார்க்கண்ட் மாநில பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் பாஜகவினர் புல்டோசர் அரசியலை குறிப்பிட்டுப் பேசியுள்ளது இப்போது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நபர்களுக்கு எதிரான நடவடிக்கையாக, புல்டோசர் வாகனங்களைப் பயன்படுத்தி, மேற்கண்ட குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர்களின் வசிப்பிடங்களை இடித்து தகர்க்கும் ஓரிரு மாநில அரசு நிர்வாகங்களின் நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தது. மாநில அரசுகளை கண்டித்துமிருந்தது.
இந்த நிலையில், புல்டோசர் அரசியலை தேர்தல் பிரசாரத்தில் பாஜகவினர் கையிலெடுத்துள்ளது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
Advertisement
Advertisement
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் இறுதிக்கட்டமாக மீதமுள்ள 38 தொகுதிகளில் நவம்பா் 20-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மேற்கண்ட இடங்களில் தேர்தல் பிரச்சாரம் இன்று(நவ. 18) மாலை நிறைவுற்றது.
அங்கு பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரத்தில் இன்று ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, “ஜார்க்கண்ட்டில் ஆளுங்கட்சியினர் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்துள்ளனர். பிரதமர் மோடி அளித்துள்ள பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர்.
வங்கதேச அகதிகள் மற்றும் ரோஹிங்கியா அகதிகள் ஊடுருவலையும் அவர்கள் ஆதரிக்கின்றனர். இது சிறுமிகளுக்கும், இங்குள்ள நிலத்துக்கும், உணவுக்கும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில், இப்போது, புல்டோசர் ஆயத்தமாகி நிற்கிறது. அவர்கள் கொள்ளையடித்த பணத்தை மீட்பதற்காக புல்டோசர் தயார்!
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட காங்கிரஸ் இடையூறு அளித்தது. ஆனால், இப்போது, அடுத்த கட்டமாக, மதுராவில் கிருஷ்ணர் கோயிலைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றார்.
ஜார்க்கண்ட்டில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு முடிந்ததும், சனிக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றைய நாளில், ஜார்க்கண்ட்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ‘ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் - ஆர்ஜேடி’ இணைந்துள்ள இந்தியா கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா அல்லது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றுமா என்பதற்கான விடை தெரிந்துவிடும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.