மகாராஷ்டிர தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல்முறையாக தில்லி சென்றுள்ளார் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்.
இந்தப் பயணத்தில், தில்லி பாஜக தலைமையிடத்தில் மூத்த தலைவர்களை சந்தித்து ஆட்சி அமைப்பது தொடர்பாக ஃபட்னவீஸ் ஆலோசனை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று தேசியவாத காங்கிரஸின் அஜீத் பவாரும் தில்லி சென்றுள்ளார். மகாராஷ்டிர மகாயுதி தலைவர்களுடன் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தெரிகிறது.
மகாராஷ்டிர சட்டப்பேரவையின் பதவிக் காலம் நாளையுடன் (நவ. 26) நிறைவடையவுள்ள நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக மகாயுதி கூட்டணியில் பேச்சுவார்த்தை நீண்டு வருகிறது.
மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. இதில் பாஜக 132, முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 57, அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளில் வென்றன.
காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்), சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி 50 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
மகாயுதி கூட்டணி உருவாக்கப்பட்டபோது, பெரும்பான்மை இல்லாத போது சிவசேனையின் ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்க பாஜகவும் தேசியவாத காங்கிரஸும் ஒப்புக் கொண்டன.
பாஜக தலைமையின் அறிவுறுத்தலை ஏற்று, தேவேந்திர ஃபட்னவீஸும் அப்போது துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
ஆனால், இம்முறை பாஜக 132 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவரே முதல்வராக பதவியேற்கும் சூழல் நிலவுகிறது.
சிவசேனையின் ஏக்நாத் ஷிண்டே மீண்டும் தன்னை முதல்வராக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அதனை பாஜக தலைவர்கள் ஏற்க வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது.
முதல்வர் பதவியேற்க தேவேந்திர ஃபட்னவீஸுக்கு ஆதரவு தெரிவிக்கவும் தயாராகவுள்ளதாக அஜீத் பவார் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.