அரசுக்கு எதிராக போராடியதால் 4 ஆண்டுகள் தடை: பஜ்ரங் புனியா
. ஊக்கமருந்து பரிசோதனைக்காக மாதிரிகளைக் கொடுக்க நான் ஒருபோதும் மறுப்பு தெரிவித்ததில்லை என்றார் பஜ்ரங் புனியா.
அதிகப்படியான ஊக்கமருந்தை எடுத்துக்கொண்டதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, தேசிய அணி தேர்வு சோதனையில் ஊக்கமருந்து சோதனை மாதிரியை சமர்ப்பிக்க மறுத்ததற்காக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை அவருக்கு 4 ஆண்டுகள் தடைவிதித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களுடன் பஜ்ரங் புனியா பேசியதாவது,
Advertisement
இது எனக்கு அதிர்ச்சியாக இல்லை. கடந்த ஓராண்டாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஊக்கமருந்து பரிசோதனைக்காக மாதிரிகளைக் கொடுக்க நான் ஒருபோதும் மறுப்பு தெரிவித்ததில்லை.
காலாவதியான மாதிரி சேகரிக்கும் கருவிகளை அவர்கள் அனுப்பிவைத்தனர். இதனை சமூக வலைதளப் பக்கத்திலும் நான் பகிர்ந்துள்ளேன். பரிசோதனைக்காக நான் சிறுநீர் மாதிரி கொடுத்திருந்தேன்.
ஆனால், அதனை பரிசோதனை செய்த கருவிகள் காலாவதியானவை என்பதை எனது குழு கண்டறிந்துள்ளது.
தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமைக்கு மின்னஞ்சல் அனுப்பி இதனைத் தெரிவித்தேன். அவர்களின் பிழையை சுட்டிக்காட்டினேன். ஆனால், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
அரசுக்கு எதிராக நாங்கள் நடத்திய போராட்டத்தால் இவ்வாறு நடக்கிறது என நினைக்கிறேன். அனைத்துப் போட்டிகளின்போதும் பரிசோதனைக்காக நான் எனது மாதிரிகளைக் கொடுத்துள்ளேன் எனக் குறிப்பிட்டார்.