முகப்பு
இந்தியா

பாபா சித்திக் வழக்கு: அக். 21 வரை காவல்! கைதானவர் சிறுவனா?

மற்றொரு நபர் 18 வயது பூர்த்தி அடையாதவர் எனக் கூறப்படுவதால், எலும்பு பரிசோதனை செய்ய உத்தரவு

Updated On : 14 அக்டோபர், 2024 at 10:59 AM
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துவரும் காவல் துறையினர் - PTI
பகிர்:

தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவார்) கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாபா சிக்திக் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரை அக். 21 ஆம் தேதி வரை 7 நாள்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மற்றொரு நபர் 18 வயது பூர்த்தி அடையாதவர் எனக் கூறப்படுவதால், எலும்பு மற்றும் திசு பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லாரன்ஸ் பிஷ்னோய் பொறுப்பேற்பு

தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் (66) மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள கேர் நகரில் அவரது எம்எல்ஏ மகன் ஜீஷன் சித்திக்கின் அலுவலகத்திற்கு வெளியே சனிக்கிழமை இரவு மூன்று நபர்களால் வழிமறித்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட காவல் துறையினர், ஹரியாணாவைச் சேர்ந்த குர்மாயில் குர்மில் சிங் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தர்மராஜ் சிங் காஷ்யப் ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவான மூன்றாவது நபரான ஷிவ் குமாரைத் தேடும் பணிகளில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... உயிரின் விலை என்ன?

கொலைச் சம்பவத்தில் நான்காவதாக ஒரு நபர் இவர்களுக்குத் தகவல் தெரிவிக்க சம்பவ இடத்தில் இருந்திருக்கலாம் எனச் சந்தேகித்து அது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாபா சிக்கிக் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்திற்கு லாரன்ஸ் பிஷ்னோய் குழு பொறுப்பேற்றுள்ளது.

7 நாள் விசாரணைக் காவல்

பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்தவர்களை காவல் துறையினர் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது குர்மில் சிங்கிற்கு அக். 21 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டது.

காவல் துறை தரப்பில் 14 நாள்கள் கோரப்பட்ட நிலையில், நீதிமன்றம் 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

மற்றொரு நபரான தர்மராஜ் சிங் காஷ்யப், 18 வயது பூர்த்தி அடையாதவர் எனக் கூறப்படுகிறது. அவரின் ஆதார் அட்டையில் 19 வயது குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதனை உறுதிப்படுத்துவதற்காக மருத்துவப் பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எலும்புகள் மற்றும் திசுக்களை பரிசோதனை செய்து வயதை உறுதி செய்யும் மருத்துவ முறைப்படி வயதை உறுதி செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிக்க | கொல்கத்தா விவகாரம்: அக். 15-ல் நாடு தழுவிய உண்ணாவிரதம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.