தீபாவளி முதல் மூன்று இலவச சிலிண்டர்கள்: ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்
தீபாவளி முதல் மூன்று இலவச சிலிண்டர்கள் திட்டத்துக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்
அமராவதி: ஆந்திர மாநில அரசு சார்பில், பயனாளர்களுக்கு ஆண்டுக்கு மூன்று இலவச சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
இதையடுத்து, பயனாளர்களுக்கு ஆண்டுக்கு மூன்று முறை இலவசமாக சிலிண்டர் வழங்கும் திட்டம் தீபாவளி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.
ஆந்திர முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் அளித்த முக்கியமான ஆறு வாக்குறுதிகளில் ஒன்றான மூன்று இலவச சிலிண்டர் திட்டம் அமைந்திருந்தது.
இந்த நிலையில், அமராவதியில் இன்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆண்டுக்கு மூன்று இலவச சிலிண்டர்கள் திட்டத்தை தீபாவளி முதல் நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக, பொது வழங்கல் துறை அமைச்சர் மனோகர் அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்துக்கு மாநில அரசு சார்பில் ஆண்டுக்கு ரூ.2,684 கோடி ஒதுக்கப்படும். ஒவ்வொரு நான்கு மாதத்துக்கும் ஒரு இலவச சிலிண்டர் வழங்கப்படும். பணம் செலுத்தி சிலிண்டர் பெற்றுக்கொள்ள வேண்டும். சிலிண்டர் வாங்கிய 48 மணி நேரத்துக்குள் பணம் வங்கியில் வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.