முகப்பு
இந்தியா

பெண்ணை நிர்வாணமாக நடனமாட வைத்து பாலியல் வன்கொடுமை!

இந்தூரில் பெண்ணை நிர்வாணமாக்கி அடித்துக் கொடுமை செய்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பற்றி...

Updated On : 4 செப்டம்பர், 2024 at 10:11 AM
கோப்புப்படம்
பகிர்:

இந்தூரில் 34 வயது பெண்ணை நிர்வாணமாக்கி, அடித்து நடனமாட வைத்ததுடன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்து 19 நாள்கள் ஆகியும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் அந்த பெண்ணின் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்து 90 நாள்களுக்குள் விசாரணையை முடிக்க காவல்துறையினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

34 வயது பெண்ணுக்கு கொடுமை

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள குடோனுக்கு கடந்த ஜூன் 11ஆம் தேதி வலுகட்டாயமாக 34 வயது பெண்ணை சிலர் இழுத்துச் சென்றுள்ளனர்.

அங்கு, அந்த பெண்ணை நிர்வாணமாக்கி பெல்ட்டால் அடித்து தாக்கியுள்ளனர். தொடர்ந்து, தொலைக்காட்சியில் காணொலிகளை போட்டு அரை மணிநேரத்துக்கு மேலாக நடனமாட வைத்து கொடுமை செய்துள்ளனர்.

மேலும், அந்த பெண்ணை இயற்கைக்கு மாறாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5 பேர் மீது வழக்குப் பதிவு

இந்த சம்பவம் தொடர்பாக, ஜூலை 17ஆம் தேதி கனாடியா காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். ஆனால், நடவடிக்கை எடுக்காததால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை ஆகஸ்ட் 14ஆம் தேதி விசாரித்த நீதிபதி, வழக்குப் பதிவு செய்து 90 நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களுடன் பேசிய காவல் துணை ஆணையர், ஆதாரங்கள் அடிப்படையில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு

இதனிடையே, பாஜகவினர் காவல்துறைக்கு அளித்த அழுத்தத்தின் காரணமாகதான் பெண்ணின் புகார் மீது வழக்குப் பதிவு செய்ய தாமதமாகி உள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நீலப் சுக்லா குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டை மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா மறுத்துள்ளார். மேலும், யார் குற்றம் செய்திருந்தாலும் பாஜக அரசால் நீதி பெற்றுத் தரப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →