மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதம் குறித்து கேள்வி? புள்ளியியல் குழுவைக் கலைத்தது மத்திய அரசு!
மத்திய புள்ளியியல் நிலைக்குழுவை மத்திய அரசு கலைத்தது பற்றி...
பொருளாதார நிபுணர் பிரணாப் சென் தலைமையிலான 14 பேர் கொண்ட மத்திய புள்ளியல் மற்றும் கணக்கெடுப்பு குழுவை மத்திய அரசு கலைத்துள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான காலதாமதம் குறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால், இந்தக் குழு கலைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
14 பேர் கொண்ட நிலைக் குழு
Advertisement
Advertisement
மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யும் முறை, மாதிரி வடிவமைப்பு, கணக்கெடுப்புக்கான கருவிகள் உள்ளிட்டவை குறித்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பொருளாதார நிபுணரும், முன்னாள் தலைமை புள்ளியியல் நிபுணருமான பிரணாப் சென் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு கடந்தாண்டு ஜூலை மாதம் நியமித்தது.
இந்த நிலையில், முறையான காரணமின்றி நிலைக்குழுவின் உறுப்பினர்களுக்குகூட தகவல் அளிக்காமல், அந்த குழுவை மத்திய அரசு கலைத்துள்ளது.
குழுவை கலைப்பதாக உறுப்பினர்களுக்கு தேசிய மாதிரி ஆய்வுகள் துறையின் இயக்குநர் கீதா சிங் ரத்தோர் அனுப்பிய மின்னஞ்சலில், “மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வழிநடத்தல் குழு மற்றும் நிலைக்குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புகள் ஒன்றோடு ஒன்று முரண்படுவதால், நிலைக்குழுவை கலைக்க அமைச்சகம் முடிவெடுத்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வழிநடத்தல் குழுவின் தலைவராக தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவர் ராஜீவ் லட்சுமனன் கரண்டிகர் உள்ளார். இந்த குழுவில், நிலைக்குழுவை சேர்ந்த 4 உறுப்பினர்கள் ஏற்கெனவே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
10 கோடி இந்தியர்கள் பாதிப்பு
பிரணாப் சென் தலைமையிலான நிலைக்குழு கலைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நிலைக்குழு கலைக்கப்பட்டது எதற்காக? 2021ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஏன் நடத்தப்படவில்லை என்று அரசிடம் மீண்டும் மீண்டும் கேட்டதற்காகவா? மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 10 கோடி இந்தியர்களுக்கு சலுகை மறுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.