முழு பாதுகாப்புடன் எல்லைகள்: பிஎஸ்எஃப்
நமது எல்லைகள் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளதாகவும் எல்லைக்கு அப்பாலிருந்து பயங்கரவாதிகள் ஊடுருவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நமது எல்லைகள் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளதாகவும் எல்லைக்கு அப்பாலிருந்து பயங்கரவாதிகள் ஊடுருவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜம்மு}காஷ்மீரின் தோடா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடம்பெற்றுள்ள 24 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வரும் 18}ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிஎஸ்எஃப் படையின் ஜம்மு பிராந்திய ஐ.ஜி. டி.கே.பூரா, தோடா மாவட்டம், பதேர்வா பகுதியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
நமது எல்லைகள் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளன. காவல்துறை உள்ளிட்ட சகோதர அமைப்புகளுடன் ஒத்துழைத்துச் செயல்படுவதன் மூலம் பயங்கரவாதிகளின் ஊடுருவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை பிஎஸ்எஃப் படை எடுத்து வருகிறது. தேர்தல் நடைமுறையின்போது எல்லைக்கு அப்பாலிருந்து பயங்கரவாதிகள் ஊடுருவுவதை அனுமதிக்க மாட்டோம் என்று அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன்.
Advertisement
எந்தச் சூழ்நிலையையும் சந்திக்க பிஎஸ்எஃப் தயாராக உள்ளது. ஜம்மு}காஷ்மீரில் சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த இப்படை தனது பங்களிப்பை வழங்கும். இங்கு (சீனாப் பள்ளத்தாக்கு) பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்துவதற்காக பிஎஸ்எஃப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் தோடா, கிஷ்த்வார் மாவட்டங்களில் பயங்கரவாதச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இச்சம்பவங்கள் குறித்து பிஎஸ்எஃப் கமாண்டர்கள் அறிந்து வைத்துள்ளனர். இப்பகுதியில் பயங்கரவாதச் சம்பவங்கள் நிகழாத வண்ணம் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். தேர்தலின்போது எந்த அசம்பாவிதச் சம்பவமும் நடைபெறாது என்று நம்புகிறேன்.
பயங்கரவாதிகள் தற்போது அதிக எண்ணிக்கையில் இல்லை. எனினும் இப்பகுதியில் வனங்களின் பரப்பு அதிகமாக உள்ளது பயங்கரவாதிகள் பதுங்குவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறது. பயங்கரவாதிகளின் சதித் திட்டங்களை முறியடிக்குமாறு பிஎஸ்எஃப் படையினரை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.