மாலத்தீவு அரசுக்கு மனமாற்றம்? மோடிக்கு எதிரான அமைச்சர்கள் ராஜிநாமா! இந்தியா வரவிருக்கும் அதிபர்!!
மாலத்தீவு அரசுக்கு மனமாற்றம் ஏற்பட்டு, மோடிக்கு எதிரான அமைச்சர்கள் ராஜிநாமா செய்திருக்கும் நிலையில், அதிபர், இந்தியா வரவிருக்கிறார்.
மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ், விரைவில் இந்தியா வரவிருப்பதாக அவரது அலுவலகம் அறிவித்திருக்கிறது. இரு நாடுகளுக்கும் ஒத்துப்போகும் நாளில் இந்த பயணத் திட்டத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருத்துகளைக் கூறி வந்த, மூயிஸ் அரசில் அமைச்சர்களாக இருந்த இரண்டு பேர் நேற்று பதவி விலகிய நிலையில், மாலத்தீவு அதிபரின் இந்திய வருகை தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
சீனாவுக்கு நெருக்கமான முகமது மூயிஸ், மாலத்தீவுகளுக்கு நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்றதிலிருந்து இந்தியாவுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடுகளை எடுத்துவந்த நிலையில், தற்போது மாலத்தீவு அரசுக்கு மனமாற்றம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
முன்னதாக, இந்தியாவின் அழைப்பை ஏற்று, கடந்த ஜூன் மாதம், பிரதமராக மூன்றாவது முறை நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு இந்தியா வந்திருந்தார் முகமது மூயிஸ். கடந்த மாதம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாலே சென்றிருந்தார். தொடர்ந்து, தற்போது அதிபர் இந்தியா வருவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகவே உள்ளது.
முகமது மூயிஸ் அதிபராகப் பதவியேற்ற பிறகு, இந்திய ராணுவத்தை ஒட்டுமொத்தமாக நாட்டிலிருந்து வெளியேற்றினார். மாலத்தீவுக்கு மருத்துவ உதவி மற்றும் கடல்சாா் கண்காணிப்புக்காக இரண்டு அதிநவீன இலகுரக ஹெலிகாப்டா்கள், ஒரு டாா்னியா் சிறிய ரக விமானம் ஆகியவற்றை இந்தியா வழங்கியிருந்தது. அவற்றை அந்நாட்டில் பராமரித்து, இயக்குவது உள்ளிட்ட பணிகளில் 88 இந்திய ராணுவ வீரா்கள் ஈடுபட்டிருந்தனர். அந்த வீரா்களை திரும்பப் பெறுமாறு, சீன ஆதரவாளரான மாலத்தீவு அதிபா் மூயிஸ் இந்திய அரசிடம் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, இந்தியா - மாலத்தீவு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்திய தரப்பில் பல ஆலோசனைகள் வழங்கப்பட்டும், அவை அனைத்தையும் மூயிஸ் நிராகரித்ததைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மாலத்தீவுகளிலிருந்து வெளியேறியது. அதன்பிறகு, சீனாவிடம் இருந்து மாலத்தீவு இலவச ராணுவ உதவி பெற ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு தடம்புரண்டுவிடும் என்றுதான் கூறப்பட்டது.
ஆனால், திடீரென ஏற்பட்ட மனமாற்றம் காரணமாக, ஜனவரி மாதம் பிரதமர் மோடியைப் பற்றி தவறான கருத்துகளைக் கூறிய இரண்டு அமைச்சர்கள் அரசிலிருந்து விலகிய நிலையில், அதிபர் மாளிகை பேச்சாளர், அதிபரின் இந்திய வருகை குறித்துஅறிவித்துள்ளார்.
அதிபர் விரைவில் இந்தியா வர திட்டமிட்டுள்ளார். இருநாட்டு தலைவர்களுக்கும் ஏற்ற ஒரு நாளில் இந்த பயண திட்டம் உறுதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.