மத்திய பிரதேசத்தில் இரு ராணுவ வீரர்களை தாக்கி, அவர்களுடன் சென்ற பெண்ணை துப்பாக்கி முனையில் மர்ம நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரில் இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமை
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ஜாம் கேட் சுற்றுலாத் தலத்துக்கு இரண்டு ராணுவ வீரர்கள் தங்களின் பெண் நண்பர்கள் இருவருடன் செவ்வாய்க்கிழமை இரவு சென்றுள்ளனர்.
புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் ஒரு ஜோடி காரின் அருகே நின்று கொண்டிருந்தபோது, அவர்களை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளது. மற்றொரு ஜோடி தடுக்க முயற்சித்த போது, அவர்களையும் தாக்கியுள்ளனர்.
அதில், ஒரு பெண்ணை மட்டும் துப்பாக்கி முனையில் காரில் பிணைக் கைதியாக பிடித்துக் கொண்டு ரூ. 10 லட்சம் எடுத்து வருமாறு மற்றவர்களிடம் கூறியுள்ளனர். இதனிடையே, உடனடியாக ராணுவத்தின் உயர் அதிகாரிக்கு சம்பவம் குறித்து தகவலை பகிர்ந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினருக்கு ராணுவம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸ் விரைந்துள்ளனர். ஆனால், அதற்குள் காருக்குள் இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு 6 பேரும் காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர்.
வழக்குப் பதிவு
இந்த சம்பவத்தில் காயமடைந்த 4 பேரையும் காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்களின் சோதனையில், அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, 6 பேரின் மீது புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும், 4 பேரை அடையாளம் கண்டுள்ள காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.