மாட்டிறைச்சி சமைத்ததாக விடுதியில் இருந்து 7 மாணவர்கள் நீக்கம்!
ஒடிஸாவில் இறைச்சி சமைத்த மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டது பற்றி...
ஒடிஸா மாநிலத்தில் கல்லூரி விடுதியில் அசைவம் சமைத்த குற்றச்சாட்டில், 7 மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பஜ்ரங் தளம் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த நிலையில், மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு என்ன?
Advertisement
Advertisement
ஒடிஸா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் பரலா மகாராஜா பொறியியல் கல்லூரி இயங்கி வருகின்றது. இந்த கல்லூரியின் விடுதியில் உள்ள ஒரு அறையில் 7 மாணவர்கள் கடந்த செப். 11ஆம் தேதி மாட்டிறைச்சி சமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, பஜ்ரங் தளம் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர்.
அதில், 6 சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் உள்பட 7 பேர் விடுதிக்குள் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டதால், பெரும் சர்சையை ஏற்படுத்தியது.
மாணவர்கள் மறுப்பு
ஹிந்து அமைப்பினரின் புகாரை தொடர்ந்து, கல்லூரிக்கு நேரில் சென்ற கோபால்பூர் காவல்துறையினர், மாணவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில், 7 பேரும் தங்கள் உறவினரின் திருமணத்தில் வழங்கப்பட்ட ஆட்டிறைச்சியைதான் சமைத்து உண்டதாக விளக்கம் அளித்துள்ளனர்.
மாணவர்கள் வெளியேற்றம்
இருப்பினும், ஹிந்து அமைப்பினர் மாணவர்கள் மாட்டிறைச்சியை தான் சமைத்து சாப்பிட்டதாக கல்லூரியின் முதல்வரை நேரில் சந்தித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, விடுதிக்குள் தடை விதிக்கப்பட்ட பொருள்களை கொண்டு வந்த குற்றத்துக்காக மாணவர்கள் 7 பேரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு ரூ. 2,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.