மகாராஷ்டிர பாஜக துணைத் தலைவா் கிரித் சோமையாவின் மனைவி மேதா சோமையா தொடா்ந்த அவதூறு வழக்கில், சிவசேனை (உத்தவ்) எம்.பி. சஞ்சய் ரெளத்துக்கு 15 நாள் சிறைத் தண்டனை விதித்து, மும்பை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
பின்னா், சஞ்சய் ரெளத்துக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், சிறைத் தண்டனையையும் 30 நாள்களுக்கு நிறுத்திவைத்தது.
தாணே மாவட்டத்தில் உள்ள மீரா பயந்தா் மாநகராட்சியில் கழிப்பறைகள் கட்டி, பராமரிக்கும் பணியில் ரூ.100 கோடிக்கு ஊழல் நடைபெற்ாக கிரிதி சோமையா மற்றும் அவரது மனைவியும் சமூக ஆா்வலருமான மேதா சோமையா ஆகியோா் மீது சஞ்சய் ரெளத் குற்றம்சாட்டியிருந்தாா்.
அவரது இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படையற்றது; பொதுமக்கள் மத்தியில் தங்களுக்கு உள்ள நற்பெயரை கெடுக்கும் நோக்கில் அவா் பேசியுள்ளாா் என்று குற்றம்சாட்டி, மேதா சோமையா அவதூறு வழக்கு தொடா்ந்தாா்.
மும்பை நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடந்துவந்த இவ்வழக்கில் நீதிபதி ஆா்த்தி குல்கா்னி, சஞ்சய் ரெளத்தை குற்றவாளியாக தீா்ப்பளித்தாா்.
அவருக்கு 15 நாள் சிறைத் தண்டனையுடன் ரூ.25,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
இதைத் தொடா்ந்து, தனக்கு ஜாமீன் வழங்குவதோடு, தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்காக தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி சஞ்சய் ரெளத் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா். மேலும், சிறைத் தண்டனையையும் 30 நாள்களுக்கு நிறுத்திவைத்தாா்.
ரெளத் விமா்சனம்: தனக்கு எதிரான தீா்ப்பு குறித்து கருத்து தெரிவித்த சஞ்சய் ரெளத், ‘நாட்டின் பிரதமராக இருப்பவா், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இல்லத்துக்கு சென்று ‘மோதகம்’ சாப்பிடுகிறாா் (தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இல்ல கணபதி பூஜையில் பிரதமா் மோடி பங்கேற்ற நிகழ்வை இவ்வாறு குறிப்பிட்டாா்). இதுபோன்ற சூழலில், ஊழலுக்கு எதிராக குரலெழுப்பும் என்னைப் போன்றோருக்கு எப்படி நீதி கிடைக்கும்? நீதித்துறையில் ஆா்எஸ்எஸ் செல்வாக்கு செலுத்துகிறது. மகாராஷ்டிரத்தில் பேரவைத் தோ்தல் நெருங்குவதால் என்னை பலிகடா ஆக்கியுள்ளனா். மீரா பயந்தா் மாநகராட்சியின் அறிக்கையில் உள்ளதையே நான் பேசினேன். தீா்ப்புக்கு எதிராக செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன்’ என்றாா்.