முகப்பு
இந்தியா

ஹைதராபாத் குண்டுவெடிப்பு: குற்றவாளிகள் 5 பேருக்கு மரண தண்டனை உறுதி!

ஹைதராபாத் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

Updated On : 8 ஏப்ரல், 2025 at 7:39 AM
ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு நடைபெற்ற பகுதி
பகிர்:

ஹைதராபாத்தில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதான குற்றவாளிகள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை தெலங்கானா உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

ஹைதராபாத்தின் தில்சுக்நகர் பகுதியில் கடந்த 2013, பிப்ரவரி 21 அன்று இரட்டை குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில், கர்ப்பிணிப் பெண் உள்பட 18 பேர் பலியாகினர். 131 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இந்திய முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் இணை நிறுவனர் யாசின் பத்கல், அந்த அமைப்பின் உறுப்பினர்கள் வாகாஸ், ஹத்தி, மோனு, அஜாஸ் ஷேக் ஆகிய பயங்கரவாதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு இயக்குநரகம் 5 குற்றவாளிகளுக்கு எதிராக மூன்று குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்தனர்.

2015, ஜூலை 16 அன்று வழக்கு விசாரணை தொடங்கிய நிலையில் 2016-ல் தேசிய புலனாய்வு இயக்குநரகத்தின் சிறப்பு நீதிமன்றம் 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இதற்கு எதிராக குற்றவாளிகள் தரப்பில் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

மேல்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் கே லட்சுமணன், பி ஸ்ரீசுபா அடங்கிய அமர்வு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, குற்றவாளிகள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து குற்றவாளி அஜாஸ் ஷேக்கின் வழக்குரைஞர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.