விமானத்தைப் போல, ரயிலிலும், ஒவ்வொரு பயணியும் குறிப்பிட்ட எடையில் மட்டுமே உடைமைகளை எடுத்துச் செல்லலாம் என்றும், அதற்கு மேல் அதிகமாக இருக்கும் உடைமைகளுக்கு 1.5 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.
விரைவு ரயில்களில் பயணிக்கும் பயணிகள் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட எடையில் மட்டுமே உடைமைகளை வைத்திருக்க வேண்டும் என்றும், அதற்கு மேல் எடையிருந்தால் அதற்கு 1.5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு விரைவு ரயிலின் ஏசி பெட்டியில் டிக்கெட் எடுத்திருக்கும் பயணி ஒருவர் அதிகபட்சமாக 70 கிலோ எடையும், ஏசி இரண்டாம் வகுப்பு பயணி 50 கிலோ எடையும் கொண்டு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏசி மூன்றாம் வகுப்பு மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு டிக்கெட் எடுத்தவர்கள் அதிகபட்சமாக 40 கிலோ வரை எடுத்துச் செல்லலாம்.
இரண்டாம் வகுப்பு பயணிகள் 35 கிலோ எடுத்துச் செல்லலாம் என்றும், ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவை விட 10 முதல் 15 கிலோ எடை அதிகமாக இருப்பின், அதற்கு வழக்கமாக ஒரு கிலோவுக்கு வசூலிக்கும் கட்டணத்தை விட 1.5 மடங்கு கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.
அண்மைக்காலமாக, ரயில்களில் பயணிகள் கொண்டு வரும் உடைமைகள் தொடர்பாக ஏராளமான புகார்கள் எழுந்த நிலையில், தெற்கு ரயில்வே புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.
நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் விரைவு ரயில்களில் பயணிக்கிறார்கள். எழும்பூர் மற்றும் சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட 260 ரயில்கள் நாள்தோறும் இயக்கப்படுகிறது. எனவே, அதிகக் கட்டண வசூலில் இருந்து தப்பிக்க, பயணிகள் உரிய எடையில் உடைமைகளை எடுத்து வரும்படி ரயில்வே அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.