முகப்பு
இந்தியா

முன்னாள் டிஜிபி கொலை: விசாரணைக்குப் பிறகே உண்மை தெரியவரும்- கர்நாடக அமைச்சர்

முன்னாள் டிஜிபி கொலைச் சம்பவத்தில் விசாரணைக்குப் பிறகே உண்மை தெரியவரும் என கர்நாடக அமைச்சர் தகவல்.

Updated On : 21 ஏப்ரல், 2025 at 6:22 AM
கொலை நடந்த வீடு - -
பகிர்:

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் முன்னாள் காவல்துறை டிஜிபி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்திய பிறகே, உண்மை என்னவென்று தெரியவரும் என கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை செய்யப்பட்ட நிலையில், சொத்துப் பிரச்னை மற்றும் குடும்பத் தகராறு காரணமாக அவரது மனைவி பல்லவியே, அவரைக் கொலை செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில், ஓம் பிரகாஷ் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததாகக் காவல்துறைக்குத் தகவல் வந்தது. விரைந்து வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், ஓம் பிரகாஷ் - மனைவி பல்லவிக்கு இடையே சொத்துப் பிரச்னை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அப்போது, ஆத்திரத்தில், பல்லவி, மிளகாய் பொடியை டிஜிபி மீது தூவி, அவரை சமையலறையில் இருந்த கத்தியால் குத்திக் கொலை செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலை செய்த பல்லவி, உடனடியாக தனது நண்பருக்கு தொலைபேசியில் விடியோ காலில் அழைத்து, அரக்கனைக் கொன்றுவிட்டேன் என்று கத்தியிருக்கிறார்.

இதன் காரணமாக, நீண்டகாலமாக, சொத்து மற்றும் குடும்பத்துக்குள் இருந்துவந்த பெரும் சண்டையே இந்தக் கொலைக்குப் பின்னணியாக இருந்திருக்கலாம் என்றும், இதற்கு முன்பும், இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு, காவல்நிலையத்துக்கு வந்த பல்லவி புகார் அளித்திருக்கிறார், ஆனால், அதனை காவல்துறையினர் விசாரிக்காததால், காவல்நிலையம் வெளியே அவர் தர்னா போராட்டத்திலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.