ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!
தில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!
தில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கில் ஆதாரங்கள் இல்லை என்பதால் வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது.
தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது பொதுப்பணித் துறையில் ஊழல் தொடர்பாக அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் மற்றும் அதிகாரிகள் மீது 2018ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பொதுப்பணித் துறையில் முறைகேடாக ஆள்களை சேர்த்தல், நிதி முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
பல ஆண்டுகளாக விசாரணை நடைபெற்ற நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
'விசாரணையில் எந்த குற்றச் செயலோ அல்லது அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கான ஆதாரங்களோ நிரூபிக்கப்படவில்லை' என்று இதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய சிபிஐ கோரியுள்ளதாகவும் நீதிபதி திக் வினய் சிங் கூறினார்.
பண ஆதாயம், சதி அல்லது ஊழல் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் சிபிஐ கண்டுபிடிக்கவில்லை என்றும் ஏதேனும் புதிய ஆதாரங்கள் கிடைத்தால், இந்த வழக்கை மேலும் விசாரிக்க சிபிஐக்கு சுதந்திரம் இருக்கும் என்றும் கூறிய நீதிபதி, சிபிஐ-யின் இறுதி அறிக்கையை ஏற்று வழக்கை முடித்துவைத்தார்.
மேலும், ஒருவரைக் குற்றம் சாட்டுவதற்கு வெறும் சந்தேகம் மட்டும் போதாது; குறைந்தபட்சம் ஆதாரம் வேண்டும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மீது பாஜக பொய்யான வழக்குகளை சுமத்துவதாகவும் இந்த கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளால் ஏற்படும் மன உளைச்சலுக்கு யார் இழப்பீடு வழங்குவார்கள்? என்றும் ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், "எங்கள் கட்சித் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய்யானவை. இதேபோன்று காலப்போக்கில் எல்லா வழக்குகளிலும் உண்மை வெளிப்படும். எங்கள் மீது பொய்யான வழக்குகளைப் பதிவு செய்து சிறைக்கு அனுப்பினார்கள்.
இந்த பொய்யான வழக்குகளைப் பதிவு செய்த அனைவரையும் இந்தப் பொய்யான வழக்குகளை போடச் செய்த தலைவர்களையும் சிறைக்கு அனுப்ப வேண்டாமா?
இரவும் பகலும் எங்கள் மீது சேற்றை வீசினார்கள். எங்கள் குடும்பங்கள் எவ்வளவு வேதனையைத் தாங்க வேண்டியிருந்தது?அதற்கெல்லாம் இழப்பீடு என்ன?
அவர்கள் எங்கள் மீது போலியான வழக்குகளைப் பதிவு செய்தார்கள். எங்களை சிறைக்கு அனுப்பினார்கள், இப்போது வழக்கை முடித்துவைக்கிறார்கள்.. இதுதான் நீதியா?" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் பலரும் விசாரணை அமைப்புகளையும் பாஜக அரசையும் கடுமையாக சாடி வருகின்றனர்.
AAP slams BJP over 'false cases' after court accepts CBI's closure report against Satyendar Jain
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.