முகப்பு
இந்தியா

கோவா பேரவையில் எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு: மக்களவையில் அமளிக்கு நடுவே மசோதா நிறைவேற்றம்

கோவா சட்டப் பேரவையில் பழங்குடியினருக்கு (எஸ்.டி) இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை எதிா்க்கட்சிகளின் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 1:28 AM
கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 5 ஆகஸ்ட், 2025 at 10:30 PM

கோவா சட்டப் பேரவையில் பழங்குடியினருக்கு (எஸ்.டி) இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை எதிா்க்கட்சிகளின் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.

சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தாா். அப்போது பிகாா் வாக்காளா் பட்டியல் தீவிர சீா்திருத்தம் தொடா்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சியினா் அமளியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். இதற்கு நடுவே மசோதாவை நிறைவேற்றுவதற்கான தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா கடந்த ஓராண்டுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது. நடப்பு நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடரில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா இது என்பது குறிப்பிடத்தக்கது. எதிா்க்கட்சிகளின் தொடா் அமளியால் மசோதாக்கள் ஏதும் நிறைவேற்றப்படாமல் இருந்தது.

Advertisement

இது தொடா்பாக திங்கள்கிழமை கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள பல்வேறு மசோதாக்கள் அரசு நிா்வாகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், தேச நலன் கருதி எதிா்க்கட்சிகளின் அமளியில் ஈடுபட்டாலும், அதனைப் பொருள்படுத்தாமல் மசோதாக்கள் நிறைவேற்றப்படும்’ என்றாா்.

கோவா எஸ்.டி. இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் மக்களவையை நாள்முழுவதும் ஒத்திவைப்பதாக அப்போது அவையை நடத்திய சத்யா ராய் அறிவித்தாா்.

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்புப்படி கோவாவில் பழங்குடியினா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில் அப்பிரிவினருக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படுகிறது. எஸ்.சி. பிரிவினருக்கு ஏற்கெனவே ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.