ராகுல் எந்த தாக்குதலுக்கும் பயப்படமாட்டார்; பின்வாங்கவும் மாட்டார்: பிரியங்கா காந்தி
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேட்டி
எந்த தாக்குதலுக்கும் ராகுல் காந்தி பயப்படமாட்டார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
பிகாரில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அதுதொடர்பான தரவுகள், தகவல்களையும் வெளியிட்டு வருகிறார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து வருகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில் 'வாக்கு திருட்டு' குற்றச்சாட்டைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டுவர முடிவு செய்துள்ளனர்.
பிகாரின் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நாள்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்றும் தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசைக் கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி,
வாக்குத் திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உண்மையைத் தெரிவிக்க வேண்டும். ராகுல் காந்தி எந்த தாக்குதலுக்கும் பயப்படமாட்டார். அவர் எல்லாவற்றையும் சமாளிப்பார். ஒருபோதும் பின்வாங்கமாட்டார். ராகுல் காந்தியால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை. மாறாக, பிரமாணப் பத்திரம், நேரு, இந்திரா என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த 10-11 ஆண்டுகளில் தங்கள் பொறுப்பிலிருந்து நழுவுவதற்காக பாஜகவினர், நேருவை பல விஷயங்களுக்கு குற்றம்சாட்டியுள்ளனர். அவர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். கடந்த காலத்தைப் பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு இன்று என்ன நடக்கிறது என்பதைப் பற்றி பேச வேண்டும். பிகாரில் சிறப்பு தீவிர திருத்தம் ஏன் செய்யப்படுகிறது என்பதற்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும், வாக்குத் திருட்டு பிரச்னை பற்றி பேச வேண்டும். வாக்குத் திருட்டு உண்மையல்ல என்றால் மக்களிடம் சொல்லுங்கள்" என்று கூறினார்.
Congress General Secretary Priyanka Gandhi has said that Rahul Gandhi will not be afraid of any attack.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.