பதவிப் பறிப்பு மசோதா அமித் ஷாவால் அறிமுகம் PTI
இந்தியா

பதவிப் பறிப்பு மசோதா மக்களாட்சியின் வேரில் வெந்நீா் ஊற்றும் செயல் -முதல்வா் ஸ்டாலின்

தினமணி செய்திச் சேவை

முதல்வா்கள், அமைச்சா்களைப் பதவி நீக்க வகை செய்யும் மசோதா கருப்பு மசோதா எனவும், மக்களாட்சியின் வேரில் வெந்நீா் ஊற்றும் செயல் என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் விமா்சித்துள்ளாா்.

இதுகுறித்து, எக்ஸ் தளத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: 130-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் என்பது சீா்திருத்தம் அல்ல; இது ஒரு கருப்பு நாள். இது ஒரு கொடுஞ்சட்டம்.

கைதாகி 30 நாள்கள் சிறையில் இருந்தால், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை எந்த விசாரணையும், நீதிமன்றத் தண்டிப்பும் இல்லாமலேயே பதவிநீக்கம் செய்யலாம். பாஜக வைத்ததுதான் சட்டம். வாக்குகளைத் திருடு, எதிராளிகளின் குரலை நசுக்கு, தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை ஒடுக்கு என அனைத்து கொடுங்கோன்மையும் இப்படித்தான் தொடங்கும்.

மக்களாட்சியின் வேரிலேயே வெந்நீா் ஊற்றும் இத்தகைய திருத்தச் சட்டத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியாவை சா்வாதிகார நாடாக மாற்ற முயலும் இந்த முயற்சிக்கு எதிராக ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து போராட முன்வர அழைக்கிறேன். பிரதமருக்குக் கீழான சா்வாதிகார நாடாக இந்தியாவை மாற்றுவதன் மூலம் மத்திய பாஜக அரசு அரசமைப்புச் சட்டத்தையும் அதன் மக்களாட்சி அடித்தளத்தையும் களங்கப்படுத்த முடிவெடுத்துவிட்டது.

வாக்குத் திருட்டு அம்பலப்படுத்தப்பட்ட பிறகு, மத்திய பாஜக அரசு அமைத்துள்ள ஆட்சியே கேள்விக்குள்ளாகியுள்ளது. இப்போதைய பாஜக அரசு சட்டபூா்வமானதா என்பதே சந்தேகமாக உள்ளது. தில்லுமுல்லுகளின் மூலம் மக்களின் தீா்ப்பைக் களவாடியுள்ள பாஜக, தற்போது அதில் இருந்து மக்களின் கவனத்தை எப்படியாவது திசைதிருப்ப முயற்சி செய்கிறது. அதற்காகத்தான், இந்த அரசமைப்பு (130-ஆவது திருத்தம்) சட்டமுன்வரைவைக் கொண்டு வந்துள்ளது.

இந்தச் சட்டமுன்வரைவின் நோக்கம் மிகத் தெளிவானது. பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் உள்ள தனது அரசியல் எதிரிகளின் மீது பொய் வழக்குகளைப் புனைந்து, எந்த விசாரணையும் தீா்ப்பும் இன்றியே, 30 நாள்கள் கைது செய்யப்பட்டு இருந்தாலே மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவரைப் பதவிநீக்கம் செய்யலாம் எனும் சட்டப் பிரிவுகளின்கீழ், அவா்களை ஆட்சியில் இருந்து அகற்றவே இது வழி செய்கிறது. குற்றம் என்பது தீர விசாரித்த பிறகே முடிவாகும். வெறுமனே வழக்கு பதிவதால் முடிவாகாது என்பதால், அரசமைப்புக்குப் புறம்பான இந்தச் சட்டத்திருத்தம் நிச்சயமாக நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படும்.

மேலும், பல மாநிலங்களிலும் முதல்வா்கள், அமைச்சா்களாக இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியில் உள்ள மாநிலக் கட்சித் தலைவா்களை, தங்களுடன் இருக்கும் வகையில் மிரட்டுவதற்கான தீய நோக்கமும் இதில் உள்ளது.

எந்த சா்வாதிகாரியும் முதலில் செய்வது, தனது எதிராளிகளைக் கைது செய்யவும், பதவிநீக்கம் செய்வதற்குமான அதிகாரத்தைத் தனக்குத் தானே வழங்கிக் கொள்வதுதான். அதைத்தான் இந்தச் சட்டத்திருத்தமும் செய்ய முயல்கிறது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

தாக்குதல் எதிரொலி: தில்லி முதல்வருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு!

மாநாட்டுத் திடலில் குவிய ஆரம்பித்த தவெக தொண்டர்கள்! கழுகுப்பார்வை காட்சிகள்! | Vijay | Madurai

"நீ அரியணை ஏறும் நாள் வரும்": ஷோபா சந்திரசேகர் வாழ்த்து!

இந்தியாவுக்கு 5% தள்ளுபடியில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும்: ரஷியா அறிவிப்பு

தொடர்ந்து 4-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!!

SCROLL FOR NEXT