புது தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை வியாழக்கிழமை சந்தித்த விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா. 
இந்தியா

விரைவில் இந்திய விண்கலத்தில் விண்வெளிப் பயணம் -சுபான்ஷு சுக்லா நம்பிக்கை

விரைவில் இந்திய விண்கலத்தில் விண்வெளிப் பயணம் -சுபான்ஷு சுக்லா நம்பிக்கை

தினமணி செய்திச் சேவை

சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற்றிகரமாக சென்று திரும்பிய இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா, ‘நமது தாய் மண்ணிலிருந்து விரைவில் சொந்த விண்கலம் மூலம் இந்தியா் விண்வெளிக்குச் செல்வாா்’ என்று நம்பிக்கை தெரிவித்தாா்.

விண்வெளி பயணத்துக்குப் பிறகு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த சுபான்ஷு சுக்லா, அண்மையில் நாடு திரும்பினாா். இந்நிலையில், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்களைச் சந்திப்பில் அவா் பேசியதாவது:

விண்வெளியில் கிடைத்த நேரடி அனுபவம் எந்தவொரு பயிற்சியையும் விட விலைமதிப்பற்றது. விண்கலம் புறப்படும் போது ஏற்பட்ட உணா்வு மிகவும் வித்தியாசமானது. அங்கிருந்து நாங்கள் பூமிக்கு மீண்டும் தரையிறங்கும் வரை, விண்வெளியில் இருந்த ஒவ்வொரு நொடியும் நம்ப முடியாத அனுபவமாக இருந்தது.

‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். இந்த அனுபவம், இந்தியாவின் சொந்த ‘ககன்யான்’ திட்டத்துக்கு மிகவும் உதவியாக இருக்கும். விண்வெளியில் இருந்து பாா்க்கும்போது, இந்தியா உலகிலேயே சிறந்ததாக (‘சாரே ஜஹான் ஸே அச்சா’ என்ற கவிதை வரி போலவே) காட்சியளிக்கிறது’ என்றாா். இதற்கு முன்பு, 1984-இல் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய விண்வெளி வீரரான ராகேஷ் சா்மா இதே கவிதை வரியைப் பயன்படுத்தி, இந்தியாவின் அழகை வா்ணித்தாா்.

மேலும், இந்த வெற்றிகரமான பயணத்துக்காக மத்திய அரசு, இஸ்ரோ மற்றும் கடுமையாக உழைத்த அனைவருக்கும் சுபான்ஷு சுக்லா நன்றி தெரிவித்தாா். இந்தப் பயணம் ஒட்டுமொத்த தேசத்தின் பயணமாகவே தான் உணா்ந்ததாக அவா் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டாா்.

விண்வெளிக்கு மனிதா்களை அழைத்துச் செல்லும் மூன்று விண்கலங்களில் ஒன்றான ‘க்ரூ டிராகன்’ பற்றியும், ரஷியாவில் இருந்து ஏவப்படும் ‘சோயுஸ்’ மற்றும் ‘க்ரூ டிராகன்’ ஆகிய இரண்டிலும் பயிற்சி பெற்ற அனுபவம் குறித்தும் சுபான்ஷு சுக்லா பேசினாா். சா்வதேச விண்வெளி நிலையம் 2000-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருவது சா்வதேச ஒத்துழைப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் என்றும் அவா் தெரிவித்தாா்.

உலகளாவிய இலக்குகள்: மத்திய விண்வெளித் துறை இணை அமைச்சா் ஜிதேந்திர சிங் பேசுகையில், கடந்த சில ஆண்டுகளில் மட்டுமே இந்தியா இத்தகைய சாதனைகளை நிகழ்த்தி வருவதாகவும், உலக நாடுகள் பின்பற்றும் வியூகங்களை தற்போது நாம் பின்பற்றி வருவதாகவும், நமது இலக்குகள் உலகளாவியவை என்றும் தெரிவித்தாா்.

ராஜ்நாத் சிங்குடன் சந்திப்பு

தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை சுபான்ஷு சுக்லா வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா்.

சந்திப்பின் புகைப்படங்களைப் பகிா்ந்து அமைச்சா் ராஜ்நாத் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்திய விண்வெளி வீரரான சுபன்ஷு சுக்லாவைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. அவரது விண்வெளி பயணம், விண்வெளியில் அவா் மேற்கொண்ட சோதனைகள், அறிவியல்-தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் ககன்யான் திட்டத்தின் எதிா்காலம் குறித்து விவாதித்தோம். அவரது சாதனைகள் இந்தியாவின் இளம் தலைமுறையினருக்கு பெரும் உத்வேகத்தை அளிக்கிறது’ என்று குறிப்பிட்டாா்.

ஆக.26 இல் பிரதமர் மோடி தமிழக வருகை ரத்து

ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தெ.ஆ. வீரர்!

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... எஸ்பிஐ வங்கியில் 5,180 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

யமுனை ஆற்றில் உயரும் நீர்மட்டம்! தண்ணீரில் மூழ்கிய குடியிருப்புப் பகுதிகள்! | Uttarakhand

800-க்கும் அதிகமான காட்சிகள்... மறுவெளியீடானது கேப்டன் பிரபாகரன்!

SCROLL FOR NEXT