ஹரியாணாவில் அரசு மருத்துவர்கள் போராட்டம்: நோயாளிகள் பாதிப்பு!
பல்வேறு மருத்துவமனைகளிலும் மருத்துவ சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது...
ஹரியாணாவில் அரசு மருத்துவர்களின் போராட்டம் காரணமாக நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். ஹரியாணாவில் அரசு மருத்துவர்களின் முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்படாததைக் கண்டித்து அம்மாநிலமெங்கிலும் அரசு மருத்துவர்கள் பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்வேறு மருத்துவமனைகளிலும் மருத்துவ சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, நோயாளிகளின் சிகிச்சைச்காக அம்மாநில அரசு தேசிய சுகாதார திட்டத்தில் பணியிலுள்ள மருத்துவர்களையும், தேசிய மருத்துவ கல்லூரிகளைச் சேர்ந்த மருத்துவர்களையும் அரசு மருத்துவமனைகளில் பணியில் அமர்த்தினர்.
ஹரியாணாவில் முதுநிலை மருத்துவ அதிகாரிகள் பணிக்கான நேரடி நியமனத்தை நிறுத்தக் கோரியும், மேம்பட்ட மருத்துவப் பணி முன்னேற்ற திட்டத்தை அமல்படுத்தக் கோரியும் இந்த போராட்டம் நடைபெற்றது. திங்கள்கிழமை(டிச. 8) தொடங்கிய போராட்டம் செவ்வாய்க்கிழமையும்(டிச. 9) தொடரும் என்று ஹரியாணா சிவில் மருத்துவ சேவைகள் சங்கம் அறிவித்துள்ளது.