சாலையைக் கடக்கும்போது அதிவேகத்தில் மோதிய கார்: தந்தை கண் முன்னே மருத்துவ மாணவி பலி!
ஹைதராபாத் நகரில் மருத்துவ மாணவி பலி..!
ஹைதராபாத் நகரில் மருத்துவ மாணவி ஒருவரும் அவரது தந்தையும் சாலையைக் கடக்கும்போது அதிவேகத்தில் சென்ற கார் ஒன்று அவர்கள் மீது மோதியதில், தந்தையின் கண் முன்னே அந்த மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஹபூப் நகர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் இரண்டாமாண்டு மருத்துவம் பயிலும் 19 வயதான மாணவி ஒருவர் தமது தந்தையுடன் இன்று(டிச. 15) காலை 7 மணியளவில் கல்லூரிக்குச் செல்வதற்காக ஹையாத்நகர் பகுதி பேருந்து நிறுத்தத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அவர்கள் இருவரும் சாலையைக் கடக்க முற்பட்டபோது, அவர்களை நோக்கி அதிவேகத்தில் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் அந்த மாணவிக்கு தலையில் பலத்த காயம் உண்டானது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது தந்தை(50) பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து, உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.