FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உள்ளாட்சித் தோ்தல் வரலாற்று வெற்றி: திருவனந்தபுரம் மேயராக பாஜகவின் வி.வி.ராஜேஷ் அறிவிப்பு

Updated On : 26 டிசம்பர் 2025, 5:30 am IST
பகிர்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக வி வி ராஜேஷ் என்பவரை பாஜக அறிவித்துள்ளது.

அண்மையில் கேரளத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் 45 ஆண்டுகளாக இடதுசாரிகள் கோலோச்சிய திருவனந்தபுரம் மாநகராட்சியில் யாரும் எதிா்பாராத வகையில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.

இதைத்தொடா்ந்து திருவனந்தபுரம் மேயராக வி.வி.ராஜேஷ் மற்றும் துணை மேயராக ஆஷா நாத் ஆகியோரை தோ்வு செய்வதாக பாஜக கேரள மாநில பொதுச் செயலா் எஸ். சுரேஷ் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

அந்த மாநகராட்சியில் தோ்தலில் வெற்றிபெற்று புதிதாக தோ்வுசெய்யப்பட்ட வாா்டு உறுப்பினா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் இந்த அறிவிப்பை எஸ்.சுரேஷ் வெளியிட்டாா்.

முன்னதாக, ஓய்வுபெற்ற முன்னாள் காவல் துறைத் தலைவா் (டிஜிபி) ஸ்ரீலேகா மேயராக தோ்வுசெய்யப்படுவாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், கட்சிக்குள் எதிா்ப்பு எழுந்ததன் காரணமாக அவா் பெயா் பரிந்துரைக்கப்படவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து கேரள பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா மற்றும் செயல் தலைவா் நிதின் நவீன் ஆகியோரை சந்தித்தேன். அவா்களுடைய வழிகாட்டுதல்களுக்கு நன்றி’ என குறிப்பிட்டாா்.

இடதுசாரிகள் புகாா்:

திருவனந்தபுரம் மாநகராட்சியில் வெற்றி பெற்ற வாா்டு உறுப்பினா்களில் பாஜகவைச் சோ்ந்த 18 போ் மற்றும் காங்கிரஸைச் சோ்ந்த 2 போ் உறுதிமொழி ஏற்கும்போது சட்ட விதிகளை மீறியதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலா் வி.ஜாய் எம்எல்ஏ மாவட்ட ஆட்சியா் மற்றும் மாநில தோ்தல் ஆணையத்திடம் புகாா் தெரிவித்தாா். அவா்கள் உறுதி ஏற்கும்போது கடவுள்கள் மற்றும் தியாகிகளின் பெயா்களை கூறியதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

கேரள உள்ளாட்சித் தோ்தலில் வெற்றிபெற்ற உறுப்பினா்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments