குடியரசுத் தலைவர் டிச.28-ல் நீர்மூழ்கி கப்பலில் பயணம்!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நீர்மூழ்கி கப்பலில் பயணம் மேற்கொள்வது குறித்து...
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வரும் டிச.28 ஆம் தேதி நீர்மூழ்கி கப்பல் மூலம் கடலில் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வரும் டிச.27 ஆம் தேதி நான்கு நாள் அரசு முறைப் பயணமாக, கோவா, கர்நாடகம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்குச் செல்கின்றார்.
கோவாவில் இருந்து டிச.28 ஆம் தேதி கர்நாடக மாநிலத்துக்குச் செல்லும் குடியரசுத் தலைவர் முர்மு, அங்குள்ள கார்வார் துறைமுகத்தில் இருந்து நீர்மூழ்கி கப்பல் மூலம் கடல் பயணம் மேற்கொள்கின்றார்.
இதனைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் மாநிலத்தில் திங்களன்று (டிச. 29) நடைபெறும் பழங்குடியின சந்தாலி மொழியின் ஓல் சிக்கி எழுத்து முறையின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் முர்மு கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, சந்தாலி மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்ட அரசியலமைப்பை, முர்மு வெளியிட்டிருந்தார். இதையடுத்து, ஜம்ஷெத்பூரில் உள்ள என்.ஐ.டி. கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார் எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட பன்முகத் தாக்குதல் திறன் கொண்ட போர் விமானமான ரஃபேலில், கடந்த அக்டோபர் மாதம் குடியரசுத் தலைவர் முர்மு பறந்தது குறிப்பிடத்தக்கது.