முகப்பு
இந்தியா

சட்டப்படிதான் இந்தியர்களின் கை,கால்களில் விலங்கு: அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் திருப்பி அனுப்பப்படுவது வழக்கமான நடைமுறைதான் என அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்.

Updated On : 6 பிப்ரவரி, 2025 at 9:40 AM
பகிர்:

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் திருப்பி அனுப்பப்படுவது வழக்கமான நடைமுறைதான் என நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் எழுப்பிய நிலையில், பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி மாநிலங்களவையில் விளக்கம் அளித்த ஜெய்சங்கர்,

"ஒரு நாட்டினர் வெளிநாட்டில் சட்டவிரோதமாக வசிப்பது கண்டறியப்பட்டால், அவர்களைத் திருப்பி அனுப்புவது அனைத்து நாடுகளின் கடமையாகும்.

சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவது புதிதல்ல. சட்டவிரோதமாக குடியேறிய அனைத்து நாட்டினரையும் அமெரிக்கா வெளியேற்றி வருகிறது. அவ்வாறு அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்படுபவர்களுக்கு விலங்கு போடும் நடைமுறை 2012 முதல் அங்கு அமலில் உள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு விலங்கு போடமாட்டார்கள்.

நாடு கடத்தப்படும் இந்தியர்களை தவறாக நடத்தாமல் இருப்பதை உறுதி செய்ய அமெரிக்காவிடம் பேசி வருகிறோம்.

நாடு கடத்தப்பட்டவர்கள் அளிக்கும் தகவலின்படி, அவர்களை அனுப்பிய முகவர்கள், நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு போடப்பட்டதால் கழிப்பறை செல்லக்கூட முடியவில்லை என்று அவர்கள் தங்கள் வேதனையைப் பகிர்ந்துள்ளனர்.

2009, 2010 ஆம் ஆண்டுகளில் இதுபோன்று இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.