அம்பேத்கர், பகத் சிங் படங்களை அகற்றவில்லை: பாஜக விளக்கம்!
தில்லி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர், பகத் சிங் படங்கள் இருக்கும் புகைப்படத்தை பாஜகவினர் பகிர்ந்துள்ளனர்.
தில்லி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர், பகத் சிங் படங்களை பாஜக அரசு அகற்றியதாகக் கூறப்பட்ட நிலையில் அவை சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படத்தினை பாஜகவினர் பகிர்ந்து விளக்கமளித்துள்ளனர்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. முதல்வராக ரேகா குப்தா மற்றும் 6 அமைச்சர்கள் கடந்த வாரம் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில், தில்லி முதல்வர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர், பகத்சிங்கின் புகைப்படங்களை தற்போதைய பாஜக அரசு அகற்றியுள்ளதாகவும், இது பாஜகவின் தலித் எதிர்ப்பு மற்றும் சீக்கிய எதிர்ப்பு முகத்தை நாட்டுக்குக் காட்டியுள்ளதாகவும் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான அதிஷி குற்றச்சாட்டை எழுப்பினார்.
Advertisement
Advertisement
ஆம் ஆத்மி தலைவரான அரவிந்த் கேஜரிவால், “பிரதமரின் புகைப்படத்தை வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், அம்பேத்கரின் புகைப்படத்தை அகற்றாதீர்கள்” என கோரிக்கை வைத்திருந்தார்.
தில்லி சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் சட்டப்பேரவைக்கு வெளியே அதிஷி தலைமையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர்.
இதையும் படிக்க | தில்லி பேரவைத் தலைவராக விஜேந்தர் குப்தா தேர்வு!
இந்த நிலையில், தில்லி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர், பகத் சிங் படங்கள் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படத்தை பாஜகவினர் பகிர்ந்துள்ளனர். அந்தப் புகைப்படத்தில் தில்லி முதல்வருக்குப் பின்னேயுள்ள சுவற்றில் பிரதமர், குடியரசுத் தலைவர், மகாத்மா காந்தியின் படங்களும் வலதுபுற சுவற்றில் பகத் சிங், அம்பேத்கர் படங்களும் இடம்பெற்றுள்ளன.
இதனைத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அமித் மால்வியா, “தில்லி முதல்வரின் அலுவலகம் இது. அனைத்து பெரிய மனிதர்களின் புகைப்படங்களும் இங்கு இருக்கின்றன. மதுபான ஊழல் வழக்கு குற்றவாளியான அரவிந்த் கேஜரிவால் முதல்வரின் அலுவலகத்துக்குச் செல்ல முடியாததால் இவ்வாறு மலிவான அரசியல் தந்திரங்களைச் செய்து வருகிறார். தேர்தல் தோல்விக்குப் பின்னர் முகத்தைக் காட்டமுடியாத அளவுக்கு மக்கள் அவரை அவமானப்படுத்தியுள்ளனர். ஆனாலும், அவர் இந்த மலிவான அரசியலை கைவிடவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.