முதலீடு செய்ய உகந்த வணிக தளமாக இருக்கும் மத்திய பிரதேசம்: மோடி
மத்திய பிரதேச அரசின் 18 புதிய கொள்கைகளை பிரதமர் மோடி வெளியிட்டார்.
இந்தியாமுதலீடு செய்ய உகந்த வணிக தளமாக இருக்கும் மத்திய பிரதேசம்: மோடி
மத்திய பிரதேச அரசின் 18 புதிய கொள்கைகளை பிரதமர் மோடி வெளியிட்டார்.
முதலீடு செய்ய உகந்த வணிக தளமாக மத்தியப் பிரதேசம் மாறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று தெரிவித்தார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்த மாநாட்டில் இந்தியாவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட முக்கிய தொழிற்துறைத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
உச்சி மாநாட்டைத் தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேசியதாவது,
வரும் ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் அதிவேக வளர்ச்சியடையும் என்று உலக வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது. சமீபத்தில் தனது உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகளவில் இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை காணும். உலகளாவிய விண்வெளி நிறுவனங்களுக்கான சிறந்த விநியோகச் சங்கிலியாக இந்தியா வளர்ந்து வருகிறது. ஜவுளி, சுற்றுலா மற்றும் தொழில்நுட்பத் துறைகள் வரும் ஆண்டுகளில் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
பாஜக ஆளும் மாநிலத்தில் பெரிய முதலீட்டை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட மத்திய பிரதேச அரசின் 18 புதிய கொள்கைகளையும் அவர் வெளியிட்டார்.
வலுவான திறமையாளர்கள் குழு, செழித்து வளரும் தொழில்களுடன் மத்திய பிரதேசம் விருப்பமான வணிக தளமாக மாறி வருகிறது. மாநிலத்தில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் என்றும் அவர் கூறினாந்ர.
மாநிலத்தில் இரட்டை இயந்திர அரசு அமைக்கப்பட்டப் பிறகு மத்திய பிரதேசத்தின் வளர்ச்சியின் வேகம் இரட்டிப்பாகியுள்ளது. இந்தியாவின் மின்சார வாகனப் புரட்சியில் முன்னணி மாநிலங்களில் மத்திய பிரதேசம் ஒன்றாகும்.
நாட்டில் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறையில் பல வாய்ப்புகள் உள்ளன, மேலும், "இந்தியாவில் குணமடைதல்'' என்ற மந்திரத்தை உலகம் விரும்புகிறது".
கடந்த 20 ஆண்டுகளில் மத்தியப் பிரதேசம் நிறைய மாற்றங்களைக் கண்டுள்ளது. மின்சாரம், தண்ணீர் தொடர்பான பிரச்னைகள் இருந்தன, சட்டம் ஒழுங்கு மோசமாக இருந்தது.
இதுபோன்ற சூழ்நிலையில், தொழில்துறை வளர்ச்சி கடினமாக இருந்தது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில், மக்களின் உதவியுடன், பாஜக மாநில அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்தி வருவதால் அந்த நிலைமை தற்போது மாறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில், முதல்வர் மோகன் யாதவ், உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டின் ஏற்பாட்டில், மத்திய பிரதேசம் ஒரு முக்கிய உலகளாவிய முதலீட்டு தளமாக அதன் அடையாளத்தை உருவாக்கும் என்றார்.
2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான நாட்டின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தின் பொருளாதாரத்தை இரட்டிப்பாக்க தனது அரசு உறுதிபூண்டுள்ளதாக யாதவ் கூறினார்.
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான அதன் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, 2025 ஆம் ஆண்டை தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஆண்டாக மத்திய் பிரதேசம் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.