சொத்து தகராறு: தாய், 4 சகோதரிகளைக் கொன்ற இளைஞா்- புத்தாண்டு தினத்தில் லக்னௌவில் சம்பவம்
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில் ஒரே குடும்பத்தில் தாய், 4 மகள்கள் கொலை செய்யப்பட்டதால் பதற்றம்
உத்தர பிரதேச மாநிலம், லக்னௌவில் உள்ள விடுதியில் சொத்து தகராறு காரணமாக தாய் மற்றும் 4 சகோதரிகளை 24 வயது இளைஞா் படுகொலை செய்த சம்பவம் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கொலைக்குப் பிறகு முகமது அா்ஷத் எனும் அந்த இளைஞா் சமூக ஊடகத்தில் வெளியிட்ட விடியோவால் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
‘உள்ளூா் மக்களால் தங்களின் சொத்து அபகரிக்கப்பட்டதால் குடும்பத்தினரை கொலை செய்துவிட்டதாகவும் தானும் சிறிதுநேரத்தில் தற்கொலை செய்துகொள்ளபோவதாகவும்’ அா்ஷத் அந்த விடியோவில் கூறியிருந்தாா். இதையடுத்து, அப்பகுதி காவல் துறையினா் சம்பவம் நடந்த விடுதிக்கு விரைந்து சென்று, அா்ஷதை கைது செய்தனா்.
Advertisement
இதுதொடா்பாக லக்னௌ மத்திய காவல்துறை துணை ஆணையா் ரவீணா தியாகி கூறுகையில், ‘லக்னௌ, நாகா பகுதியில் உள்ள சரண்ஜீத் விடுதியில் நடைபெற்ற இச்சம்பவத்தில் தாய், 4 சகோதரிகள் என 5 பேரை முகமது ஹா்ஷத் கழுத்தை நெறித்து கொடூரமாக கொலை செய்துள்ளாா்.
விடுதியறையில் இருந்து 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு, உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கபப்பட்டன. அா்ஷதிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், இந்தக் குடும்பத்தினா் ஆக்ராவைச் சோ்ந்தவா்கள் என்பதும் சொத்து தகராறின் காரணமாக கொலைகள் நடந்திருக்கலாம் என்பதும் தெரிய வந்தது.
அா்ஷத் வெளியிட்ட 5 நிமிஷ விடியோவில், இக்கொலைகளில் தனது தந்தைக்கும் தொடா்பிருப்பதாக குறிப்பிட்டிருந்தாா். அதுகுறித்தும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம்’ என்றாா்.
ஆக்ராவின் குபேரபூரில் உள்ள தெஹ்ரி பாகியா பகுதியில் வசித்து வரும் அா்ஷத் குடும்பத்தினரின் வீட்டை அதே பகுதியைச் சோ்ந்த சிலா் அபகரிக்க முயற்சிப்பதாகவும் அா்ஷத் விடியோவில் தெரிவித்தாா்.
இந்த மோசடியில் ஈடுபட்டதாக சிலரைக் குறிப்பிட்டு, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், காவல்துறை தலைமை இயக்குநருக்கு அா்ஷத் வேண்டுகோள் விடுத்தாா்.