ஒடிசாவில் கனமழையால் நிலச்சரிவு! ரயில் சேவைகள் ரத்து!
ஒடிசாவில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் முக்கிய ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள ஏராளமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள ஏராளமான ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி பல்வேறு முக்கிய சாலைகள் மற்றும் பாலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில், கோராபுட் மாவட்டத்தின் ஏராளமான இடங்களில் இன்று (ஜூலை 2) நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், கோராபுட் மற்றும் ஜெய்ப்பூர் இடையிலான ரயில் பாதைகள் நிலச்சரிவினால் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, கிழக்கு கடற்கரை ரயில்வே, ஜகதல்பூர் - புவனேஸ்வரம் இடையிலான ஹிராகாண்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் கிரண்டுல் - விசாகப்பட்டிணம் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்களின் சேவைகளை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
இதையடுத்து, கனரக இயந்திரங்களின் உதவியுடன் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட ரயில் பாதைகளில், ரயில்வே பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கனமழையால் நெடுஞ்சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் கோராபுட் மற்றும் ராயகாடா இடையிலான சாலைப் போக்குவரத்தும் முற்றிலுமாக முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
SUMMARY
Heavy rains in Odisha's Koraput district have caused landslides in numerous places, severely disrupting traffic.
இதையும் படிக்க: சீன உரங்களை சார்ந்திருப்பது இந்திய விவசாயத்திற்கு அச்சுறுத்தல்!