பலியான மருத்துவ மாணவர்கள் குடும்பத்துக்கும் இழப்பீடு: டாடா குழுமத்துக்குக் கோரிக்கை
விமான விபத்தில் பலியான மருத்துவ மாணவர்கள் குடும்பத்துக்கும் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என டாடா குழுமத்துக்குக் கோரிக்கை
அகமதாபாத்: ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான மருத்துவ மாணவர்கள் குடும்பத்துக்கும் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று டாடா குழுமத்தின் நிர்வாகி என். சந்திரசேகரனுக்கு இந்திய மருத்துவக் கழகம் வேண்டுகோள் வைத்துள்ளது.
ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான மருத்துவ மாணவர்கள் மற்றும் காயமடைந்த மாணவர்களுக்கும் விமானப் பயணிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது போன்ற இழப்பீட்டை டாடா குழுமம் வழங்க வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜூன் 12ஆம் தேதி அகமதாபாதிலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், விமான நிலையத்துக்கு அருகே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இருந்த 242 பேரில் 241 பேர் பலியாகினர். பலியானவர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என ஏர் இந்தியாவின் டாடா குழுமம் அறிவித்திருந்தது.
Advertisement
Advertisement
ஏர் இந்தியா விமானம், பிஜே மருத்துவக் கல்லூரியின் குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்ததில், அங்கிருந்த மாணவர் விடுதி கடும் சேதமடைந்தது. அதிலிருந்த 7 மருத்துவ மாணவர்கள் பலியாகினர். மேலும் சிலரும் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், இந்திய மருத்துவக் கழகத்தின் குஜராத் பிரிவு எழுதியிருக்கும் கடிதத்தில், விபத்து நடந்த இடத்தில் பலியான மருத்துவ மாணவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும், டாடா குழுமம் தேவையான உதவிகளை செய்ய வேண்டும். இவர்கள் விபத்தில் பலியானவர்கள் மட்டுமல்ல, எங்களது எதிர்காலத் தூண்களாக இருந்தவர்கள். இவர்களுக்கும் உங்களது ஆதரவும் இழப்பீடும் தேவை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.