பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது!
பயங்கரவாதிகள் எனத் தெரிந்தும், அடைக்கலம் கொடுத்ததாக இருவர் ஒப்புக் கொண்டனர்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவரை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்துள்ளது.
பயங்கரவாதிகள் என்று தெரிந்தும், அவர்களுக்கு அகமது ஜோதர் மற்றும் பஷீர் அகமது ஜோதர் என்ற இருவர் அடைக்கலம் கொடுத்துள்ளனர். ஹில் பார்க்கில் ஒரு குடிசையில் தங்கவைத்து, உணவு உள்ளிட்ட வசதிகளையும் செய்து தந்ததாக ஒப்புக் கொண்டனர். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய 3 பயங்கரவாதிகளும், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதையும் கைது செய்யப்பட்டவர்கள் உறுதி செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில், ஏப்ரல் 22 ஆம் தேதியில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 பேர் பலியாகினர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. இருப்பினும், போரை நிறுத்த பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்த நிலையில், போர் நிறுத்தப்பட்டது.
இதனிடையே, பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்பவர்களையும் மத்திய அரசு கண்காணித்து, கைது செய்து வருகிறது.
இதையும் படிக்க: துப்பாக்கி கைமாறாது! ஜனநாயகன் பிறந்தநாள்!