உ.பி. பேரவையில் பான் மசாலாவை உமிழ்ந்த எம்எல்ஏ
உத்தரப் பிரதேச பேரவைக்குள் பான்மசாலா போட்டுத் துப்பிய சம்பவம் பற்றி..
உத்தர பிரதேச சட்டப்பேரவையில் பான் மசாலாவை உமிழ்ந்த எம்எல்ஏவை பேரவைத் தலைவா் சதீஷ் மஹானா செவ்வாய்க்கிழமை கடிந்துகொண்டாா்.
அந்த மாநில சட்டப்பேரவை செவ்வாய்க்கிழமை காலை கூடியபோது, பேரவையின் பிரதான மண்டப நுழைவுவாயிலில் எம்எல்ஏ ஒருவா் பான் மசாலாவை உமிழ்ந்தது தனது கவனத்துக்கு வந்துள்ளதாக சதீஷ் மஹானா தெரிவித்தாா்.
அந்த எம்எல்ஏவின் பெயரை தான் குறிப்பிட விரும்பவில்லை என்று தெரிவித்த அவா், சம்பவம் தொடா்பான காணொலி தன்னிடம் இருப்பதாகவும் கூறினாா். அந்த எம்எல்ஏ தன்னை சந்திக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவருக்கு சம்மன் அனுப்பப்படும் என்றும் சதீஸ் மஹானா எச்சரித்தாா்.
இதுபோன்ற செயல்களில் பிற எம்எல்ஏக்கள் ஈடுபடாமல், பேரவையின் கண்ணியத்தை காக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.