கட்டுக்கட்டாக பணம்: விடுமுறையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா! பணியிட மாற்றம்!!
கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்த விவகாரத்தில் தொடர்புடைய நீதிபதி யஷ்வந்த் வர்மா இன்று விடுமுறை
தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம் மீட்கப்பட்ட விவகாரம், வெள்ளிக்கிழமை காலை முதல் சட்டத்துறை மற்றும் நீதிமன்ற வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் மார்ச் 14ஆம் தேதி திடீரென தீ விபத்து நேரிட்டது. தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கச் சென்றபோது, நீதிபதியின் வீட்டில் இருந்து ஏராளமான பணம் மீட்கப்பட்டதாக பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நீதிபதி வர்மாவை அவர் முன்பு பணியாற்றிய உயர் நீதிமன்றமான அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Advertisement
இடமாற்றம் குறித்து கொலீஜியம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை என்றால், அவரது இடமாற்றம் உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவே கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. தமிழகத்தின் சிறந்த முதல்வர் யார்? குரோக் ஏஐ சொன்ன பதில்.. அந்த டேய்-ஐ தவிர்த்திருக்கலாம்!
உச்ச நீதிமன்றத்திலும் பரபரப்பு...
ஒரு நீதிபதியின் அதுவும் நாட்டின் தலைநகரான தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியின் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவமும் அதன் விளைவுகளும் ஏற்படுத்திய பதற்றம் உயர் நீதிமன்றத்தில் மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத்திலும் எதிரொலித்தது. உச்ச நீதிமன்றத்தில் பல நீதிபதிகளின் அமர்வுகள் இன்று காலை உரிய நேரத்தில் கூடவில்லை.
கொலீஜியம் அமர்வுகள் (உச்ச நீதிமன்றத்தின் ஐந்து மூத்த நீதிபதிகள் தலைமையிலான அமர்வுகள்) வழக்கமான தொடக்க நேரத்தை விடவும் 45 நிமிடங்கள் தாமதமாகவே அதாவது காலை 11:15 மணிக்கு மட்டுமே கூடியன.
அதுபோல, தில்லி உயர் நீதிமன்றத்திலும், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அமர்வு இன்று செயல்படவில்லை. நீதிமன்ற ஊழியர்கள் அவர் விடுமுறையில் இருப்பதாக அறிவித்தனர்.
தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர உபாத்யாயா அமர்வு தொடங்கியபோது, வழக்குரைஞர்கள் குழு இந்தப் பிரச்னையை எழுப்பியது. இந்த சம்பவம் நம்மில் பலரை வேதனைப்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நிர்வாக ரீதியாக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மூத்த வழக்குரைஞர் அருண் பரத்வாஜ் வலியுறுத்தினார்.
நீதிபதிகள் இதை அறிந்திருப்பதாக தலைமை நீதிபதி பதிலளித்தார்.