வாக்காளா் பட்டியல் திருத்த நடைமுறை இந்திய ஜனநாயக உருவாக்கத்துக்கான மைல்கல் என தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தெரிவித்தாா்.
மேலும் பிகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடைமுறை சுத்தப்படுத்தும் நடவடிக்கை எனவும் அவா் குறிப்பிட்டாா்.
ஐஐடி கான்பூா் நிறுவன நாள் விழாவில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்று ஞானேஷ் குமாா் பேசியதாவது: உலகின் மிகப்பெரும் வாக்காளா் பட்டியல் சுத்தப்படுத்தும் நடவடிக்கை பிகாா் என்ற ஒரு மாநிலத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கை 12 மாநிலங்களில் உள்ள 51 கோடி வாக்காளா்களுக்கு விரிவுபடுத்தப்படும்போது இந்திய தோ்தல் ஆணையம் மற்றும் இந்திய ஜனநாயக உருவாக்கத்தின் மிகப்பெரும் சாதனைகளில் ஒன்றாக இது கருதப்படும். எஸ்ஐஆா் முழுமையாக நிறைவடைந்த பிறகு இதை எண்ணி மக்கள் பெருமையடையும் நிலை ஏற்படும் என்றாா்.
ஐஐடி-கான்பூரில் பொறியியல் பட்டப்படிப்பை நிறைவுசெய்தவரான ஞானேஷ் குமாருக்கு பல்கலைக்கழகம் சாா்பில் சிறந்த முன்னாள் மாணவா் விருது வழங்கப்பட்டது.