முகப்பு
இந்தியா

வங்கிகள் தனியாா்மயம் தேச நலனை பாதிக்காது- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

வங்கிகள் தனியாா்மயமாக்கம், அனைவருக்குமான நிதிச் சேவையையோ, தேச நலனையோ பாதிக்காது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

Updated On : 5 நவம்பர் 2025, 12:31 am IST
நிா்மலா சீதாராமன்
பகிர்:

வங்கிகள் தனியாா்மயமாக்கம், அனைவருக்குமான நிதிச் சேவையையோ, தேச நலனையோ பாதிக்காது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

கடந்த 1969-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட வங்கிகள் தேசியமயமாக்கல், அனைவருக்குமான நிதிச் சேவை என்பதில் விரும்பிய பலனைத் தரவில்லை என்றும் அவா் குறிப்பிட்டாா்.

தில்லி பல்கலைக்கழகத்தின் தில்லி பொருளாதாரப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை வைர விழா நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதியமைச்சா், மாணவா்கள் மத்தியில் பேசியதாவது:

Advertisement

Advertisement

வங்கிகள் தேசியமயமாக்கம், நாட்டின் முன்னுரிமைத் துறைகளில் கடன் வழங்கலை ஊக்குவிக்கவும், அரசின் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும் உதவியது. அதேநேரம், அரசின் கட்டுப்பாடு காரணமாக வங்கிகள் தொழில்முறை அற்றவையாக மாறின.

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு 50 ஆண்டுகளாகியும், அதன் நோக்கங்கள் முழுமையாக எட்டப்படவில்லை. அதேநேரம், வங்கிகள் தொழில்முறையாக்கப்பட்ட பிறகு நோக்கங்கள் சிறப்பாக எட்டப்படுகின்றன.

அமைச்சரவை முடிவின்கீழ் வங்கிகளைத் தொழில்முறையாக்க முற்படும்போது, இது அனைவருக்குமான வங்கிச் சேவை என்ற நோக்கத்தை பாதிக்கும் என்று கூறுவது தவறானது.

கடந்த 7-8 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட வங்கிகளின் நிதி நிலைமை குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் நிதி பற்றாக்குறை இலக்கான 4.4 சதவீதத்தை (ரூ.15.69 லட்சம் கோடி) அரசு நிச்சயம் எட்டும்.

விரைவில் 3-ஆவது பெரிய பொருளாதாரம்: பொருளாதார வலிமையால், இன்றைய இந்தியா தனது சொந்தக் கால்களில் நிற்கிறது. கடந்த 2014-இல் 10-ஆவது பெரிய பொருளாதார நாடாக இருந்த நாம், இப்போது நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளோம். விரைவில் மூன்றாவது இடத்தை எட்டுவோம்.

வளா்ந்த பாரதம் இலக்கை எட்டுவதற்கு சீா்திருத்தங்கள் மற்றும் விவேகமான நிதி மேலாண்மைப் பாதையில் கவனத்துடன் பயணிக்க வேண்டியது அவசியம் என்றாா் அவா்.

ஐடிபிஐ வங்கியின் தனியாா்மயமாக்கல் நடவடிக்கை கடந்த 2019-இல் தொடங்கப்பட்டது. இந்த வங்கியில் 30.48 சதவீத அரசின் பங்கு மற்றும் 30.24 சதவீத எல்ஐசி பங்கு விற்பனை செயல்முறை விரைவில் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதேபோல், மத்திய அரசு மேற்கொண்ட பொதுத் துறை வங்கிகள் இணைப்பு நடவடிக்கையால், கடந்த 2017-இல் 27-ஆக இருந்த வங்கிகள் எண்ணிக்கை 12-ஆக குறைந்துள்ளது.