ஹரியாணாவில் வீட்டிற்கு வெளியே காவல் அதிகாரி ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியாணா மாநிலம், ஹிசாரில் வசித்து வந்தவர் துணை ஆய்வாளர் ரமேஷ் குமார். இவருடைய வீடடிற்கு வெளியே வியாழக்கிழமை நள்ளிரவில் இளைஞர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சத்தம் கேட்டு குமார் தனது வீட்டை விட்டு வெளியே வந்து, அவர்கள் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்துவதை எதிர்த்தார்.
பின்னர் அவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறினர். ஆனால் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மேலும் பலருடன் கார் மற்றும் இருசக்கரவாகனங்களில் அவர்கள் வந்து, ரமேஷ் குமாரின் வீட்டின் வெளியே மீண்டும் பிரச்னை செய்துள்ளனர். உடனே வீட்டை விட்டு வெளியே வந்த ரமேஷ், இதுகுறித்து அவர்களிடம் கேட்டிருக்கிறார்.
அப்போது ரமேஷை திட்டிய அவர்கள் தடிகளாலும் செங்கற்களாலும் தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதனிடையே குமாரின் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வந்து அக்கம்பக்கத்தில் உதவி கோரினர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் காரையும் இரண்டு இருசக்கர வாகனங்களையும் விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
நிகழ்வைத் தொடர்ந்து, மூத்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் கொலை தொடர்பாக 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 5 பேரைக் கைது செய்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் அதே பகுதியில் வசித்து வந்ததாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
இதனிடையே கொலை செய்யப்பட்ட ரமேஷ் குமார்(57), அடுத்த ஆண்டு ஜனவரியில் ஓய்வு பெறவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.