ராஜஸ்தான்: சிறைக் காவலர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை
ராஜஸ்தானில் சிறையில் காவலர் ஒருவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் சிறையில் காவலர் ஒருவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர் ராம்கிஷோர் மோடிவால் (37). இவர் பில்வாரா மாவட்ட சிறையில் கண்காணிப்பு கோபுரத்தில் சனிக்கிழமை இரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது சர்வீஸ் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
தனது ஷிப்ட் முடிவதற்கு சற்று முன்பு, அவர் தனது சர்வீஸ் துப்பாக்கியால் மார்பில் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார் என்று சிறை கண்காணிப்பாளர் சைலேந்திர சிங் கூறினார். மற்றொரு காவலர் ராம்கிஷோரை விடுவிக்க வந்தபோது, அவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு உடனடியாக சிறை நிர்வாகத்திற்கு தகவல் அளித்தார்.
தடயவியல் குழு சம்பவ இடத்திற்கு வந்து ஆதாரங்களை சேகரித்தது. உடல் விடியோவில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் கூராய்வுக்காக மகாத்மா காந்தி மருத்துவமனையின் பிணவறைக்கு மாற்றப்பட்டது. ராம்கிஷோரின் மூத்த சகோதரர் நானுராம் கோட்வாலி காவல் நிலையத்தில் இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என்று ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தார்.
கரூர் சம்பவம்- தவெக அலுவலக நிர்வாகியிடம் 2ஆவது நாளாக சிபிஐ விசாரணை
தற்கொலை செய்துகொண்ட காவலர் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள ஹர்மடா கிராமத்தில் வசிப்பவர் என்றும், சனிக்கிழமைதான் விடுப்பில் இருந்து திரும்பியதாகவும் போலீஸார் தெரிவித்தனர். சம்பவம் நடந்தபோது மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அவர் பணியில் இருந்தார். இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.