ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் வாக்குச் சாவடி அலுவலராகப் பணிபுரிந்து வந்த அரசுப் பள்ளி ஆசிரியா் ஓடும் ரயில் முன் பாய்ந்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியால் (எஸ்ஐஆா்) ஏற்பட்ட கடுமையான அழுத்தம் காரணமாக, அவா் தற்கொலை செய்துகொண்டதாக அவரின் குடும்பத்தினா் தெரிவித்தனா்.
ஜெய்பூரின் நாஹிரி கா பாஸ் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவா் முகேஷ் ஜாங்கிட் (45). வாக்குச்சாவடி நிலை அலுவலராக (பிஎல்ஓ) எஸ்ஐஆா் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அவா், பிந்தாயகா பகுதியில் உள்ள ரயில்வே கடவுப்பாதை அருகே ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து அவரின் சகோதரா் கஜானந்த் கூறுகையில், ‘தற்கொலை செய்துகொள்ளும் முன், முகேஷ் தற்கொலை கடிதம் எழுதி வைத்துள்ளாா்.
அதில் எஸ்ஐஆா் பணிகளால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அவரின் மேலாளா் அழுத்தம் அளித்து பணியிடை நீக்கம் செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்’ என்று தெரிவித்தாா்.